பெருந்துயரம்... மின்சாரம் தாக்கி பெண் தூய்மை பணியாளர் பலி! நிற்கதியாய் நிற்கும் குழந்தைகள்..!
சென்னையில் கன மழை காரணமாக தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடமேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த வரலட்சுமி என்ற தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த வரலட்சுமி (30) என்பவர் கனமழை காரணமாக சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சாலையில் மின்சார கம்பி ஒன்று அறுந்து விழுந்து உள்ளதை கவனிக்காமல் பணியை மேற்கொண்டுள்ளார்.
இதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் வரலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பணிக்குச் சென்ற வரலட்சுமி காலை உணவு அருந்த வராததால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் கண்ணகி நகர் பகுதிக்குச் சென்று பார்த்த போது அவர் சாலையில் விழுந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: போராடும் மக்களைப் பார்க்க டைம் இல்ல! மோனிகா பாட்டுக்கு வைப் பண்ண டைம் இருக்கா? ஜெயக்குமார் சாடல்..!
இதை அடுத்து 193 வது மாமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு வரலட்சுமி உறவினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று மாதங்களுக்கு மேலாக மின்வடங்களை புதைக்காதது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மின்சார ஊழியர்கள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வரலட்சுமி உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மின்சாரம் பாய்ந்து பெண் தூய்மை பணியாளர் உயிரிழந்த சம்பவத்தால் அவரது குடும்பமே நிற்கதியாக நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வரலட்சுமி கணவர் கடந்த நான்கு ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.
தனி ஒரு பெண்ணாக பணிக்குச் சென்று குடும்பத்தை வரலட்சுமி காப்பாற்றி வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தாயை இழந்த வரலட்சுமியின் இரண்டு குழந்தைகளும் தவித்து வருகின்றனர். எனவே வரலட்சுமி குழந்தைகளுக்கு அரசு தரப்பில் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு.. தூத்துக்குடியில் கடையடைப்பு போராட்டம்..!!