×
 

நக்கீரன் கோபாலுக்கு சட்ட சிக்கல்..! பாசிச வெறியாட்டம்... பந்தாடிய சீமான்..!!

நக்கீரன் கோபால் மீது வழக்கு தொடரப்பட்ட சம்பவத்திற்கு சீமான் கண்டனம் தெரிவித்தார்.

கரூர் பேரவலம் குறித்த தனது கருத்துக்களையும், ஐயங்களையும் முன்வைத்ததற்காக நக்கீரன் கோபால் மீது வழக்குத் தொடுப்பதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். நக்கீரன் கோபால் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் எனவும் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

கரூரில் நடைபெற்ற பேரவலம் குறித்த தனது கருத்துக்களையும், ஐயங்களையும் தெரிவித்ததற்காக நக்கீரன் இதழின் ஆசிரியரும், மூத்தப் பத்திரிக்கையாளருமான நக்கீரன் கோபால் மீது வழக்குத் தொடுத்திருக்கும் தவெக அரசின் செயல் குடிமகனின் அடிப்படை ஜனநாயக உரிமையானக் கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் கொடுஞ்செயல் என்று தெரிவித்தார்.

மாற்றுக்கருத்துத் தெரிவிப்போர் மீது வழக்குத் தொடுத்து அச்சுறுத்துவதும், எல்லாவற்றிற்கும் எடுத்த எடுப்பிலேயே கைதுநடவடிக்கையைப் பாய்ச்சுவதுமானப் போக்கு கண்டனத்திற்குரியது என்றார். கரூர் கோர விபத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு ஒன்றியப் புலனாய்வு விசாரணைக்கு அழைக்கப்பட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் காவல்துறையினர் மக்களைக் கொன்றுகுவித்தனர் என மனம்போன போக்கில் வாய்க்கு வந்ததைத் துளியும் பொறுப்புணர்வின்றிப் பேசும்போது தவெக அரசு வேடிக்கை பார்த்ததாக கூறினார். 

இதையும் படிங்க: மாற்றம் இல்லை... வெறும் ஏமாற்றம் மட்டுமே! தவெக அரசை சாடிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

தனது கேள்விகளையும், ஐயங்களையும் முன்வைத்ததற்கே வழக்குத் தொடுப்பது வெளிப்படையான அச்சுறுத்தலின்றி, வேறில்லை என கூறினார். இதுவெல்லாம் பாசிச வெறியாட்டத்தின் தொடக்க நிலை என்றும் இதனைக் கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறி உள்ளார். ஆகவே, நக்கீரன் கோபால் மீது தேவையற்று தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமெனவும், கருத்துரிமைக்கு எதிரான கொடுங்கோல்போக்கைக் கைவிட வேண்டுமெனவும் சீமான் வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: நீர்ப்பாசனத் திட்டம் எங்கே? வேளாண் பட்ஜெட்டை கடுமையாக சாடிய சௌமியா அன்புமணி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share