×
 

பாஜக கூட கூட்டணி வச்சு எம்.எல்.ஏ ஆனது யாரு? நானா? திருமாவளவனா? சீமான் கிடுக்குப்பிடி கேள்வி!

''பாஜ உடன் கூட்டணி வைத்து மங்களூரில் சட்டமன்ற உறுப்பினர் ஆனது நானா, அண்ணன் திருமாவளவனா,'' என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். திராவிடம் தமிழர்களின் அடையாளத்தையும் மொழியையும் அழிக்க திட்டமிட்டு செயல்படுவதாக அவர் கடுமையாக விமர்சித்தார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எதிர்க்கேள்விகளை எழுப்பினார்.

சீமான் கூறுகையில், “நீங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறீர்கள். நாங்கள் தமிழர்கள் என்று சொல்கிறோம். அதனால் அந்த அடிப்படையில் தேர்தலை சந்திக்க உள்ளோம். நீங்கள் திட்டமிட்டு எங்கள் அடையாளத்தையும் மொழியையும் அழிக்க நினைக்கிறீர்கள். அதற்கு நிறைய சான்றுகள் தர முடியும். அதற்கு தனியாக மேடை போடுகிறேன்” என்றார்.

திராவிடம் குறித்து கேள்வி எழுப்பிய சீமான், “திராவிடனா, தமிழனா என்றால் எனக்கு ஒரு கேள்வி வருகிறது. நான் ஏன் திராவிடனாக இருக்க வேண்டும்? கீழடி என்பது என்ன நாகரிகம்? இவர்கள் திராவிட நாகரிகம் என்று சொல்கிறார்கள். 

இதையும் படிங்க: எல்லாமே பெரியார்தான் என்பவன் எனக்கு ஓட்டு போட வேண்டாம்... சீமான் தடாலடி...!

அவர்கள் இந்திய நாகரிகம் என்று சொல்கிறார்கள். 2,200 ஆண்டுகளுக்கு முன்பு யார் திராவிடர்கள்? ஏது கன்னடம், ஏது தெலுங்கு? நீங்களே சொல்லுங்கள். அப்படி எதுவும் இல்லை. எனவே தமிழர் நாகரிகம் என்று சொல்வதில் என்ன பிரச்சினை?” என்று கேட்டார்.

மேலும், “திட்டமிட்டு எனது பெருமைகளையும் அடையாளங்களையும் அழித்து நினைக்கிறீர்கள். தமிழை திராவிடம் வளர்க்கிறதா? பெருவுடையார் கோயிலை திராவிட கட்டடக் கலை என்று சொல்கிறீர்கள். திராவிட நாகரிகம், திராவிட பண்பாடு, திராவிட திருநாள் என்று கூறுகிறீர்கள். அப்போது வெறி வருமா? வராதா? அதனால் இது சண்டை” என்று தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த சீமான், “வணிகர்களை அழைத்து மாநாடு போடும் ஸ்டாலின், Rainbow என்பதை தமிழில் ரெயின்போ என்று எழுதச் சொல்கிறார். 80,000 முதுநிலை ஆசிரியர்கள் தமிழில் தோல்வியடைகிறார்கள். 50,000 பேர் தமிழில் தேர்வு எழுதாமல் தோல்வியடைகிறார்கள். வேறு மொழி வளர்க்கப்படுகிறது என்றால் Tanglish வளர்க்கப்படுகிறது” என்று கூறினார்.

திருமாவளவனுக்கு எதிர்க்கேள்வி எழுப்பிய சீமான், “பாஜக உடன் கூட்டணி வைத்து மங்களூரில் சட்டமன்ற உறுப்பினர் ஆனது நானா, அண்ணன் திருமாவளவனா? வாஜ்பாய்க்கு வீர வணக்கம் என்று சொல்வது அரசியல் நாகரிகம் என்று சொல்கிறார். நான் ஒரு மேடை போட்டு பாரதியைப் பேசுவது அநாகரிகம் ஆகிறதா? 

என் அண்ணன் எப்படி விமர்சனம் செய்தாலும் பதில் கருத்து சொல்லிவிட்டு ஒதுங்கி போய்க்கொண்டிருக்கிறேன். ஏனெனில் மோதலை எனக்கும் என் அண்ணனுக்கும் இடையில் மாற்றி விட்டு திராவிடன் மஞ்சள் குளிப்பான். சண்டை எனக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையிலா? எனக்கு எதிரி என்ன விசிகவா? எங்க அண்ணனை எதிர்க்கவா நான் கட்சி ஆரம்பித்தேன்?” என்று கேட்டார்.

சீமானின் இந்தப் பேச்சு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திராவிடம் vs தமிழ் அடையாளம் என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது. சீமான் தரப்பு திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறது.

இதையும் படிங்க: ஆமா, அவர்தான் எங்களுக்கு பிரசவம் பார்த்தாரு... பாஜக பெற்ற பிள்ளைகள் என கூடிய திருமாவுக்கு சீமான் பதிலடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share