×
 

எங்கப்பா மரணத்துல மர்மம் இருக்கு? விரிவான விசாரணை தேவை!? அஜித் பவாரின் மகன் வலியுறுத்தல்!

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அவரது மகன் ஜெய் பவார் வலியுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவருமான அஜித் பவார் ஜனவரி 28-ஆம் தேதி பயங்கர விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. 

புனே மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பாராமதிக்கு செல்லும் வழியில், மும்பையிலிருந்து புறப்பட்ட சிறிய ரக Learjet 45XR விமானம் பாராமதி விமான நிலைய அருகே கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து தீப்பற்றி நொறுங்கியது. விமானத்தில் இருந்த அஜித் பவார், அவரது பாதுகாப்பு அதிகாரி, இரண்டு ஊழியர்கள் மற்றும் இரண்டு குழுவினர் என ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அஜித் பவார் மகாராஷ்டிராவின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர். தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பாஜக-சிவசேனா-என்சிபி கூட்டணி அரசில் துணை முதல்வராக பதவி வகித்து வந்தார். சரத் பவாரின் என்சிபியுடன் தனது பிரிவை இணைக்க திட்டமிட்டிருந்த சூழலில் இந்த விபத்து நிகழ்ந்தது அரசியல் வட்டாரத்தில் பல சந்தேகங்களை எழுப்பியது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர் சுநேத்ரா!! எளிய முறையில் நடக்கும் பதவியேற்பு விழா!

இந்நிலையில், அஜித் பவாரின் இளைய மகன் ஜெய் பவார் விபத்து குறித்து கடும் கோரிக்கை விடுத்துள்ளார். தனியார் விமான நிறுவனமான VSR Ventures-ன் அலட்சியம் மற்றும் முறைகேடுகளே விபத்துக்கு காரணம் என்று அவர் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

“விமானத்தின் கருப்பு பெட்டி (black box) அவ்வளவு எளிதில் சேதமடையாது. மகாராஷ்டிரா மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். அரசு விரிவான, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். அலட்சியம், முறைகேடுகள் காரணமாக இது நடந்திருக்கலாம் என்ற பேச்சுகள் உள்ளன. VSR நிறுவனத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று ஜெய் பவார் தெரிவித்துள்ளார்.

என்சிபி மூத்த தலைவர் பிரபுல் படேலும் விமான நிறுவனத்தையும் விமானியின் அலட்சியத்தையும் குற்றஞ்சாட்டியுள்ளார். விபத்து தொடர்பான விசாரணை ஆய்வு ஆணையம் (AAIB) மூலம் நடந்து வருகிறது. கருப்பு பெட்டியில் இருந்து சில தரவுகள் பெறப்பட்டுள்ளன. ஆனால், தீயால் சேதமடைந்ததால் முழு விவரங்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. என்சிபி CBI விசாரணை கோரியுள்ளது.

இந்த விபத்து மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவாரின் மறைவு கூட்டணி அரசு மற்றும் என்சிபி-யில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. உண்மை வெளியாக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா துணை முதல்வராகிறார் அஜித்பவார் மனைவி?! இன்று பதவியேற்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share