திடீரென எகிறிய மின்கட்டணம்! மின்வாரியமே ஒப்புக்கொண்ட குளறுபடி! தமிழகம் முழுவதும் களஆய்வுக்கு உத்தரவு!
மின்வாரிய கணக்கில் குளறுபடிகள் ஏற்பட்டு, பெரும் நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பொதுமக்க்ளுக்கு தவறான மற்றும் அதிகப்படியான மின்கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான மின்கட்டணங்கள் பதிவாகியிருப்பதாக மின்வாரியத்தின் தலைமை பொறியாளர் தெரிவித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறைகளில் ஏற்பட்ட குறைபாடுகளே இதற்குக் காரணம் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதனால், பல இடங்களில் மின் நுகர்வோர் எதிர்பார்த்ததை விட அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் கூறுகையில், “மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறையில் ஏற்பட்ட குறைபாடுகளால் சில இடங்களில் மின் நுகர்வோருக்கு தவறான மற்றும் அதிகப்படியான கட்டணம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மீட்டர் கணக்கீடுகளில் குறைபாடுகள் ஏற்பட்டு, பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “மின்வாரிய கணக்கில் குளறுபடிகள் ஏற்பட்டு, பெரும் நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் பொதுமக்களுக்கு தவறான மற்றும் அதிகப்படியான மின்கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லஞ்ச விவகாரத்தில் மீண்டும் லஞ்சம்: சஸ்பெண்ட் ஆன அதிகாரிக்கு பணி வழங்க லட்சம் கேட்ட உதவியாளர் கைது!
மின்வாரிய அதிகாரிகளால் அடிப்படை களஆய்வு முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால்தான் இதுபோன்ற குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மின் விநியோக வட்டங்களில் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. பழுதடைந்த மீட்டர்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் தொடக்க நிலையிலேயே கண்டறியப்படாததே இதற்கு முக்கிய காரணம்” என்றார்.
இதன் காரணமாக மீட்டர் செயல்பாடு மற்றும் மின் பயன்பாட்டு கணக்கீட்டில் தவறுகள் ஏற்பட்டதாகவும், கள ஆய்வுப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த நிலையைத் தவிர்க்க முடிந்திருக்கும் என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும், இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க மாநிலம் முழுவதும் ஆய்வுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதோடு, “காலமுறைப்படி முறையான ஆய்வு மேற்கொள்ள மேற்பார்வை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன். மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் முறையாக பணியாற்றுகிறார்களா என்பதை இனி அடிக்கடி களஆய்வு மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.
மின்கட்டணத்தில் ஏதேனும் முரண்பாடு இருப்பதாக சந்தேகிக்கும் நுகர்வோர், தங்களது மின்வாரிய அலுவலகத்தை அணுகி மீட்டர் விவரங்கள் மற்றும் பில்லிங் பதிவுகளை சரிபார்க்கலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள இந்த ஆய்வுகள் மூலம் தவறான கணக்கீடுகள் குறைந்து, மின்கட்டண வசூல் நடைமுறை மேலும் துல்லியமாகும் என்று மின்வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகம் வரும் ராகுல்காந்தி! தமிழக காங்கிரசில் அதிரடி மாற்றம்! 77 புதிய மாவட்ட தலைவர்களுக்கு சிறப்பு பயிற்சி!