×
 

டாஸ்மாக் பார் ஒப்பந்தத்தில் இனி பழைய ஆதிக்கம் இருக்காது! புதியவர்களுக்கு கதவு திறந்த தவெக அரசு!

தமிழகத்தில், 'டாஸ்மாக்' கடைகளை ஒட்டி, 'பார்' எனப்படும் மதுக்கூடங்களை, பல ஆண்டுகளாக குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே நடத்தி வரும் நிலையில், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஒட்டியுள்ள பார்கள் (மதுக்கூடங்கள்) அமைப்பதற்கான விதிகளில் அரசு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை குறிப்பிட்ட சிலர் மட்டுமே தொடர்ந்து ஒப்பந்தங்களை பெற்று வந்ததாக கூறப்பட்ட நிலையில், இனி புதியவர்களும் டெண்டரில் பங்கேற்கும் வகையில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லரை மதுபானக் கடைகளுக்கு அருகில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள் விற்பனை செய்யும் பார்களை நடத்த தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக டெண்டர் அறிவிக்கப்பட்டு, தேர்வாகும் நபர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதுவரை நடைமுறையில் இருந்த விதிகளின்படி, பார் அமைக்கப்படும் கட்டடத்தின் உரிமையாளரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயமாக இருந்தது.

ஆனால், பல இடங்களில் கட்டட உரிமையாளர்களே பார்களை நடத்தி வந்ததால், புதிய விண்ணப்பதாரர்கள் டெண்டரில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பல ஆண்டுகளாக ஒரே தரப்பினர் ஒப்பந்தங்களை பெற்று வந்ததாகவும், டாஸ்மாக் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களிலும் சிக்கல்கள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: டாஸ்மாக் பார் தொடங்குவதற்கான விதிகள் தளர்வு! மாறிய விதிமுறைகள்! முழு விவரம்!

இந்தச் சூழலில், கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த பார் ஒப்பந்தங்கள் தற்காலிகமாக மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாத தொடக்கத்தில் புதிய டெண்டர் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான புதிய விதிமுறைகளை தமிழக அரசு அரசாணை மூலம் வெளியிட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, இனி டாஸ்மாக் கடையுடன் இணைந்த இடத்தில் மட்டுமல்லாமல், அந்தக் கடையை ஒட்டியுள்ள இடம் அல்லது டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ள இடத்திலும் பார் அமைக்க அனுமதி வழங்கப்படும். மேலும், பார் அமைப்பதற்கான குறைந்தபட்ச பரப்பளவு 15 சதுர மீட்டரில் இருந்து 20 சதுர மீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களால், இதுவரை டெண்டரில் பங்கேற்க முடியாமல் இருந்த புதிய தொழில்முனைவோருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், டெண்டர் நடைமுறையில் போட்டி அதிகரித்து, டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாயும் உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: பாட்டிலுக்கு 10 ரூபாய்... 27ம் தேதிக்கு பிறகு காத்திருக்கும் ட்விஸ்ட்... அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share