தமிழகத்தில் முடங்கும் சூரியசக்தி உற்பத்தி..!! மின் விநியோகத்தில் நெருக்கடி உருவாகும் அபாயம்..!!
சூரியசக்தி, காற்றாலை மின் நிலையங்களில் உற்பத்தி தொடங்க அனுமதி அளிக்காமல், மாதக்கணக்கில் மின் வாரியம் முடக்கி வைத்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு மின் உற்பத்திக்கு தயாராக உள்ள சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்படாததால், பல நூறு கோடி ரூபாய் முதலீடுகள் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தகவல்களின்படி, 736.50 மெகாவாட் திறனில் 226 சூரியசக்தி திட்டங்களும், 400 மெகாவாட் திறனில் 4 காற்றாலை திட்டங்களும் அமைக்கப்பட்டு தயாராக உள்ளன. ஆனால், இத்திட்டங்களை துணை மின் நிலையங்களுடன் இணைக்க மின் வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பல நிறுவனங்கள் மின் உற்பத்தியை தொடங்க முடியாமல் உள்ளன. வங்கிகளில் கடன் பெற்று திட்டங்களை செயல்படுத்திய முதலீட்டாளர்கள், கடன் தவணைகளை செலுத்துவதில் சிரமம் எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ரயிலை நிறுத்தி பயணிகளிடம் வழிப்பறி! பெண் பயணியிடம் நகை பறிப்பு! ஆட்டோ டிரைவரை தட்டி தூக்கிய ரயில்வே போலீஸ்!
மத்திய அரசின் புதிய விதிகளுக்கு ஏற்ப சூரியசக்தி திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டிய நடைமுறைகள் காரணமாக அனுமதி தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், பல மின் நிலையங்களில் டிரான்ஸ்பார்மர் வசதிகள் போதிய அளவில் இல்லாததால், காற்றாலை மின்சார உற்பத்தியும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர். போதிய காற்று இருந்தபோதும் மின்சாரத்தை மின் வாரியத்திற்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
புதுப்பிக்கத்தக்க மின்சாரத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்க, தொழில் துறையினர், உற்பத்தியாளர்கள் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
மின் உற்பத்திக்கு தயாராக உள்ள திட்டங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்பட்டால், மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதுடன், முதலீட்டாளர்களின் நெருக்கடியும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கட்சியை விட்டு நீக்கிட்டா போதுமா..? ஒழுக்கத்தை கத்துக்கொடுங்க CM..! நயினார் தாக்கு..!