வேன்–கார் நேருக்கு நேர் மோதல்… நொடியில் பற்றி எரிந்த வாகனங்கள்! வங்கி உதவி மேலாளர் உடல் கருகி பலி!
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு வாகனங்களிலும் எரிந்த தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் கார் மற்றும் வேன் தீயில் முற்றிலும் கருகி சேதமடைந்தன.
தென்காசி: தென்காசி மாவட்டம் இலத்தூர் அருகே வேனும் காரும் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், காரை ஓட்டி வந்த வங்கி உதவி மேலாளர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் குமாரசாமி ராஜா நகரை சேர்ந்தவர் விஜய் ஆனந்த் (34). இவர் சிவகாசியில் உள்ள கனரா வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு குற்றாலம் சென்றுவிட்டு தனது காரில் சிவகாசி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் சிவகாசியில் இருந்து 13 பேர் கொண்ட சுற்றுலா குழுவினர் வேனில் குற்றாலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதிகாலை இலத்தூர் விலக்கு அருகே திருமங்கலம்–கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இரு வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதையும் படிங்க: தென்காசியில் வீட்டுக்குள் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து வெடித்து விபத்து?! நொடியில் தரைமட்டமான வீடு! 2 குழந்தைகள் படுகாயம்!
மோதலின் வேகத்தில் கார் மற்றும் வேன் பலத்த சேதமடைந்தன. தொடர்ந்து இரு வாகனங்களிலும் திடீரென தீப்பற்றியது. இதனால் வேனில் இருந்த 13 பேரும் அதிர்ச்சியடைந்து அலறியபடி கீழே இறங்கி உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த நர்கீஸ்பானு (18), பல்கீஸ்பானு (21), ஹசீனாபானு (42) ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் காருக்குள் சிக்கிய விஜய் ஆனந்தால் வெளியேற முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அவர் காருக்குள்ளேயே உடல் கருகி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு வாகனங்களிலும் எரிந்த தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் கார் மற்றும் வேன் தீயில் முற்றிலும் கருகி சேதமடைந்தன.
விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பினர். இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி உதவி மேலாளர் தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவில் திடீர் பரபரப்பு! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த முக்கிய நிர்வாகிகள்! இபிஎஸ் கோவம்!