×
 

தி கேரளா ஸ்டோரி 2 ..! தடை பண்ணலனா அவ்ளோ தான்.. சீமான் எச்சரிக்கை..!!

தி கேரளா ஸ்டோரி 2 படத்திற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் கேரளா ஸ்டோரி 2 திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். இசுலாமிய மக்களை மிகக்கேவலமாக இழிவுப்படுத்திப் பயங்கரவாதிகளாகக் கொலைகாரர்களாகச் சித்தரிக்கும் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் நீட்சியாக கேரளா ஸ்டோரி-2 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் ‘கேரளா ஸ்டோரி-1’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதித்தபோதே, அதனைக் கடுமையாக எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராடிய நிலையில், தற்போது ‘கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தையும் திமுக அரசு தமிழ்நாடு முழுதும் திரையிட அனுமதித்திருப்பது வெட்கக்கேடானது என்றும் கூறினார்.

இசுலாமிய பெருமக்களை இழிவுப்படுத்தும் வழக்கமான குற்றக்காட்சிகளையும் தாண்டி, ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படம் கட்டாய மதமாற்றம், லவ்ஜிகாத், கூட்டுப்பாலியல், மாட்டுக்கறி திணிப்பு போன்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் இசுலாமிய மத அடையாளங்களை இணைத்து திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இந்தியாவில் எந்த இடத்திலும் நடக்காதவற்றைக் குரூர கற்பனையில் திரைப்படமாக எடுப்பவர்களின் நோக்கம்தான் என்ன என்றும் அதே போன்று நிகழ்வுகள் நடந்து நாட்டில் மதக்கலவரம் ஏற்பட வேண்டும் என்பதா எனவும் சீமான் கேட்டார்.

'காஷ்மீர் பைல்ஸ்’, ‘புர்கா’ ‘கேரளா ஸ்டோரி1’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படமும் இஸ்லாமிய மதத்தினரையும், அவர்களின் வழிபாட்டு முறையினையும் திட்டமிட்டு இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ளது என்றும் இது மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி இந்த நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் உள்நோக்கமுடையது எனவும் படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மத மக்களை ஒட்டுமொத்தமாகக் குற்றவாளி கூண்டில் ஏற்றும் காட்சிப்படுத்தல்கள் மத நல்லிணக்கத்திற்கும், பொது அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தக்கூடியவை எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “சின்னப்பையன் சீமான்.... இனி உனக்கு ஒரு பையன் ஓட்டு போடமாட்டான்...”  - நாதகவை நாறுநாறாக கிழித்த நாஞ்சில் சம்பத்....!

மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்துத் தமிழ்நாடு அரசு ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட தடைவிதிக்க வேண்டுமென்றும் இல்லையென்றால், ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கையும் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டுத் திரைப்படத்தைத் தடுத்து நிறுத்துவோம் என்றும் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: All the best..!! 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு... EPS, விஜய், சீமான் மாணவர்களுக்கு வாழ்த்து..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share