30 ஆண்டுகால உழைப்பு விற்பனை செய்யப்படுகிறது! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலுக்கு ஜோதிமணி எம்.பி. கடும் எதிர்ப்பு!
கொங்கு வேளாள கவுண்டர் மற்றும் அருந்ததியர் சமூகங்கள் புறக்கணிப்பு ராகுல் காந்தியின் நிலைப்பாட்டிற்கு எதிரானது என ஜோதிமணி எம்.பி சாடல்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது சொந்தக் கட்சித் தலைமைக்கு எதிராகக் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தகுதியுள்ள பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சியில் 20 முதல் 30 ஆண்டுகளாக அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார். "கள அனுபவமே இல்லாத, சில நாட்களுக்கு முன்பு கட்சிக்கு வந்தவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. லாயல் ஆன தொண்டர்களின் உழைப்பு, கட்சியில் எந்தப் பங்களிப்பும் இல்லாதவர்களால் விற்பனை செய்யப்படுவது வேதனையளிக்கிறது" என அவர் சாடியுள்ளார்.
மேற்கு மண்டலத்தில் (கொங்கு மண்டலம்) காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வில் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்: இந்த மண்டலத்தின் பெரும்பான்மைச் சமூகமான கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி கேட்டுப் பெற்ற 6 தனித் தொகுதிகளில் ஒன்றில் கூட அருந்ததியர் சமூகத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது தமிழக அரசியல் வரலாற்றிலேயே நடக்காத ஒன்று என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: இலவசம் தேசத்தை நாசமாக்கிவிட்டது! நாமக்கல்லில் திராவிட கட்சிகளை வறுத்தெடுத்த சீமான்!
பெண்களுக்குப் போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதையும் அவர் முன்னிலைப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் வெறும் 2 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதி குறித்துப் பேசும் ராகுல் காந்தியின் அரசியல் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது என ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.
வேட்பாளர் மற்றும் தொகுதித் தேர்வு மிகவும் ரகசியமாகவும், ஜனநாயகமற்ற முறையிலும் நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். நாங்கள் விரிவான கலந்துரையாடல் மூலம் வேட்பாளர்களைத் தேர்வு செய்யக் கோரினோம். ஆனால், பொறுப்பில் இருப்பவர்கள் அதனை நிராகரித்துவிட்டு, தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர் எனத் தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த பெண் எம்.பி. ஒருவரே கட்சியின் வேட்பாளர் பட்டியலுக்கு எதிராகப் பகிரங்கமாகப் போர்க்கொடி தூக்கியிருப்பது திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அடிமை அதிமுக-வின் முதுகில் ஏறி வரும் பாஜக-வைத் தடுப்போம்! நெல்லையில் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின்பிரச்சாரம்!