அமெரிக்காவில் இருந்து வெளியேறினால் ரூ.2.18 லட்சம்! இந்தியர்களுக்கு தாஜ்மஹால் படத்துடன் விளம்பரம்!
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாட்டினர், தாங்களாகவே வெளியேறினால், அவர்களுக்கு தேவையான விமான டிக்கெட்டும், ரூ.2.42 லட்சம் எக்ஸிட் போனஸ் ஆக வழங்கப்படும் என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் தாங்களாகவே முன்வந்து வெளியேறினால், அவர்களுக்கு நிதி உதவி மற்றும் இலவச பயண வசதி வழங்கப்படும் என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) அறிவித்துள்ளது. "புராஜெக்ட் ஹோம் கமிங்" (Project Homecoming) என்றழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தாமாக முன்வந்து வெளியேறும் நபர்களுக்கு 2,600 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ₹2,18,000) ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இது அவர்கள் தங்கள் தாய்நாட்டில் மறுவாழ்வைத் தொடங்க உதவியாக இருக்கும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. வெளியேறச் சம்மதிப்பவர்களுக்கு அவர்களின் தாய்நாட்டிற்குச் செல்வதற்கான விமான டிக்கெட் செலவை அமெரிக்க அரசாங்கமே ஏற்கும்.
இதற்காக CBP Home என்ற பிரத்யேக மொபைல் செயலியை அமெரிக்க அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தங்களது விபரங்களைப் பதிவு செய்து, வெளியேற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். தாமாக வெளியேறுபவர்கள் மீது சட்டப்படியான கைது அல்லது தடுப்புக்காவல் நடவடிக்கைகள் எடுக்கப்படாது. மேலும், அவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த குடிவரவு அபராதங்களும் ரத்து செய்யப்படும்.
இதையும் படிங்க: வடகொரியாவின் அதிரடி சோதனை! 10 ஏவுகணைகளை ஏவி மிரட்டிய கிம் ஜான் உங்!
இந்தியர்களை ஈர்க்கும் வகையில், இந்தத் திட்டத்திற்கான விளம்பரத்தில் தாஜ்மகால் உருவத்தைப் பயன்படுத்தி, இந்தியாவுக்கு இலவசமாகப் பறந்து செல்லுங்கள் என்ற வாசகத்துடன் அமெரிக்கத் தூதரகம் மற்றும் பாதுகாப்புத் துறை விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.
ஒருவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்து நாடுகடத்த அமெரிக்காவிற்கு சுமார் 18,000 டாலர்கள் வரை செலவாகிறது. ஆனால், இந்தத் திட்டத்தின் மூலம் ஒருவரை அனுப்ப வெறும் 5,000 டாலர்கள் மட்டுமே செலவாகும் என்பதால், வரி செலுத்துவோரின் பணத்தைச் சேமிக்க அமெரிக்க அரசு இந்த உத்தியைக் கையாண்டு வருகிறது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்கள், விரைவில் கைது செய்யப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுவார்கள்; அவர்கள் மீண்டும் ஒருபோதும் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கிறிஸ்டி நோம் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: எதிரிகளுக்கு இடமில்லை! ஹார்மூஸ் ஜலசந்தி குறித்து ஈரானின் அதிரடி திட்டவட்டம்!