×
 

தவெக நிர்வாகிகளும், விஜய்யும் பண்ணுறது சரியா? கட்டுக்கடங்காத கூட்டத்தால் மிரளும் போலீசார்!!

த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்திற்கு வரும் கட்டுக்கடங்காத கூட்டம், போலீசாரை மிரள வைத்துள்ளது. விஜய் கட்சியினரும், நெரிசலை ஊக்குவிப்பதாக, புகார் எழுந்துள்ளது.

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய் பிரசாரத்துக்கு வரும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய், போலீசாரை மிரள வைத்துள்ளது. கரூர் சம்பவத்துக்குப் பிறகும் கூட்ட நிர்வாகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

நேற்று முன்தினம் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசல், போலீஸ் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விஜய் கட்சியினர் “போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை” என்று குற்றம் சாட்டிய நிலையில், போலீஸ் தரப்பு தங்கள் பக்கத்து நிலவரத்தை விளக்கியுள்ளது.

போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “பிரசாரத்துக்கு அனுமதி கேட்ட த.வெ.க. நிர்வாகிகளிடம், எத்தனை பேர் வருவார்கள் என்று கேட்டபோது, ‘நாங்கள் 100 பேர் வருவோம். மக்கள் எவ்வளவு பேர் வருவார்கள் என்பது தெரியாது’ என்று பதில் அளித்தனர். 

இதையும் படிங்க: நோட்டாவுக்கு கூட போடுங்க!! தயவுசெஞ்சு திமுகவுக்கு வேணாம்!! தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் புது பிரசாரம்!

கூட்டத்தைக் கட்டுப்படுத்த என்ன ஏற்பாடு செய்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு, ‘எங்களால் முடியாது, நீங்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும்’ என்றனர். வாகனங்களை எங்கு நிறுத்துவது என்று கேட்டதற்கு, ‘சாலையோரம் நிறுத்திக் கொள்வார்கள்’ என்று மட்டும் சொன்னார்கள். எந்தக் கேள்விக்கும் பொறுப்பான பதில் இல்லை” என்று தெரிவித்தனர்.

மேலும், “த.வெ.க. தரப்பில் 100 பேர் மட்டுமே வருவதாகச் சொன்னதால், நாங்கள் 100 போலீசாரை பாதுகாப்புக்கு அனுப்பினோம். ஆனால் உண்மையில் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். விஜய் வாகனத்துக்கு முன்பாக ‘மீடியா’ வாகனம் என்ற பெயரில் இரு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. வேகமாகப் போகச் சொன்னாலும் கேட்கவில்லை. விஜய் வாகன டிரைவரிடம் ஹாரன் அடிக்கச் சொன்னாலும் அவர் அடிக்கவில்லை” என்றனர்.

விஜயின் பாதுகாப்புப் பணி கேரளாவைச் சேர்ந்த ‘ஹண்டர்’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி துபாயில் பயிற்சி பெற்றவர் என்றாலும், உள்ளூர் சூழல் அவருக்கு தெரியவில்லை. 100 பவுன்சர்கள் மற்றும் த.வெ.க.வைச் சேர்ந்த 50 தன்னார்வலர்கள் விஜய் வேனைச் சுற்றி நின்றாலும், மக்களைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று போலீஸ் தரப்பு கூறுகிறது.

“விஜய் வந்ததும், அவருடன் வருபவர்கள் மக்களை புகைப்படம் எடுக்க அழைத்தனர். மக்கள் முண்டியடித்து ஓடி வந்தபோது தடுப்புகளை மீறி நெரிசல் ஏற்பட்டது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

போலீஸ் வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: “சிறிய இடங்களில் விஜய் பிரசாரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா போல் அகன்ற சாலைகளில் மட்டுமே பிரசாரம் செய்ய வேண்டும். விஜய் தரப்பினர் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால் கரூரில் ஏற்பட்டதுபோல் பெரும் விபத்து நிகழும் அபாயம் உள்ளது” என்று எச்சரித்தனர்.

விஜய் பிரசாரத்தில் ஏற்படும் தொடர் நெரிசல் சம்பவங்கள், த.வெ.க.வின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. தேர்தல் பிரசாரம் தீவிரமடையும் நிலையில், பொது மக்கள் பாதுகாப்பு குறித்து அனைத்துத் தரப்பினரும் உரிய கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 

இதையும் படிங்க: ஒரு தொகுதியாச்சும் மாத்தி வாங்குங்க!! ஓயாத பிரச்னை!! பியூஸ் கோயலிடம் மல்லுக்கட்டும் பாஜக நிர்வாகிகள்!!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share