×
 

புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருக்கும் 6 லட்சம் பேர்... எப்போது கிடைக்கும்..??

3 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. எப்போது கொடுக்கப்படும் என்பது அரசின் முடிவாகும்.

தமிழகத்தில் பொதுவினியோகத் திட்டத்தின் மூலம் 34,911 ரேஷன் கடைகள் வழியாக விலையில்லா அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் தற்போது 2 கோடியே 28 லட்சத்து 41 ஆயிரத்து 335 குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளதாகவும், அவற்றின் மூலம் சுமார் 7 கோடி மக்கள் பயன்பெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரேஷன் கார்டு என்பது அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெறுவதற்கான ஆவணம் மட்டுமல்லாமல், அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கான முக்கிய அடையாள ஆவணமாகவும் விளங்குகிறது. திருமணத்திற்குப் பிறகு தனிக் குடும்ப அட்டைக்காக அதிக அளவில் மக்கள் விண்ணப்பிப்பதும் இதற்கே காரணமாகும். இலவச வேட்டி-சேலை, பொங்கல் பரிசுத் தொகுப்பு, சிறப்பு நிவாரண உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்கள் குடும்ப அட்டையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுவதால், புதிய ரேஷன் கார்டு பெறுவதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 16 முதல் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் நடைமுறைகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மார்ச் 31 வரை புதிய அட்டைகள் வழங்கப்படவில்லை. இதற்கிடையில், ஆன்லைன் வாயிலாக தினமும் ஆயிரக்கணக்கானோர் புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்து வந்தனர்.

இதையும் படிங்க: இறந்தவர்கள் பெயர்கள் நீக்கும் நடவடிக்கை..!! ரேஷன் அட்டையில் வந்த அதிரடி மாற்றம்..!!

மாநிலத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகும் புதிய ரேஷன் கார்டுகள் இன்னும் வழங்கப்படாததால், கடந்த ஆறு மாதங்களாக விண்ணப்பித்தவர்கள் காத்திருக்கும் நிலை நீடித்து வருகிறது. மார்ச் மாதம் வரை சுமார் 3 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 21 ஆயிரம் விண்ணப்பங்களைத் தவிர மற்ற அனைத்தும் பரிசீலனைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கூடுதலாக சுமார் 3 லட்சம் விண்ணப்பங்கள் மின் ஆளுமைத் துறைக்கு வந்துள்ளன.

அதிகாரிகள் கூறுகையில், முதல் கட்டமாக சுமார் 3 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் அச்சிடப்பட்டு வருவதாகவும், அவற்றை எப்போது விநியோகிப்பது என்பது அரசின் இறுதி முடிவைப் பொறுத்தது என்றும் தெரிவித்தனர். புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு ஏழு வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. குறிப்பாக ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் சூழலில் தனித்தனி குடும்ப அட்டைகள் வழங்குவது தொடர்பாக விரிவான ஆய்வு மற்றும் கள விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. 

அனைத்து விவரங்களும் உறுதி செய்யப்பட்ட பிறகே புதிய அட்டைகள் வழங்கப்படுவதால், இந்த நடைமுறையே தாமதத்திற்கு முக்கிய காரணமாக இருப்பதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தற்போது தயாராகும் புதிய ரேஷன் கார்டுகளை முதலமைச்சர் விஜய் நேரடியாக வழங்குவாரா அல்லது வழக்கம்போல மாவட்ட மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் விநியோகிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 

இதையும் படிங்க: "பட்ஜெட்"..! எகிறும் எதிர்ப்பார்ப்பு... முதல்வர் விஜய் துறைவாரியாக ஆலோசனை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share