×
 

பஜ்ஜியோ, போண்டாவோ.. இனி NEWSPAPER-ல் மடித்து தரக்கூடாது..!! FSSAI அதிரடி உத்தரவு..!!

செய்தித்தாள்களில் மடித்துத் தரப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தெரு உணவு வியாபாரம் மற்றும் சிறிய உணவகங்களில் இன்றும் பரவலாகக் காணப்படும் ஒரு தவறான பழக்கத்துக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மீண்டும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. வடை, சமோசா, போண்டா, பஜ்ஜி உள்ளிட்ட சுடச்சுட உணவுப் பண்டங்களைப் பழைய செய்தித்தாள்களில் மடித்து விற்பது 2018-ம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகளின்படி தடை செய்யப்பட்டுள்ளது. 

இருப்பினும், பல இடங்களில் இந்தப் பழக்கம் தொடர்வதால் பொதுமக்களின் உடல்நலம் பெரும் அபாயத்தில் உள்ளது. செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் கருப்பு மை மற்றும் சாயங்களில் ஈயம், கன உலோகங்கள், ரசாயனப் பொருட்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் கலவைகள் உள்ளன. சூடான உணவைச் செய்தித்தாளில் வைக்கும்போது இந்த மை உருகி உணவோடு கலந்துவிடும் வாய்ப்பு அதிகம். இதனால் நீண்டகாலத்தில் வயிற்றுப் பிரச்னைகள், உணவு விஷம், ஈய விஷம் (Lead Poisoning), சிறுநீரகப் பாதிப்பு மற்றும் சில வகை புற்றுநோய்கள் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோருக்கு இந்த ஆபத்து அதிகம். பழைய செய்தித்தாள்கள் பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்பட்டவை. அவற்றில் அச்சு மை தவிர, பூச்சிக்கொல்லி மருந்துகள், அழுக்கு, தூசு மற்றும் பல்வேறு நுண்ணுயிரிகளும் இருக்கும். இவை உணவுடன் கலந்தால் உடனடி வயிற்றுப்போக்கு, உணவு அலர்ஜி மற்றும் நீண்டகால உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, FSSAI இந்தப் பழக்கத்தை முற்றிலுமாகத் தடை செய்து, மாநில உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: உணவே உயிர்... World Hunger Day-யில் முதல்வர் விஜய் மனிதநேய செயல்..! முக்கிய உத்தரவு..!

உணவு விற்பனையாளர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் இந்த சட்டத்தை மதிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் உரிம ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள், செய்தித்தாள்களில் உணவு மடித்து விற்பது கண்டால் உடனடியாக அருகிலுள்ள உணவுப் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளிக்கலாம். FSSAI-யின் ஹெல்ப்லைன் எண்ணான 1800-11-2100-க்கு தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னைக்கு மாற்றாக, உணவு தர நிலை அங்கீகாரம் பெற்ற பேப்பர், இலை, தட்டு, உணவு தர பாலிதீன் அல்லது பேக்கேஜிங் பொருட்களைப் பயன்படுத்துமாறு FSSAI வலியுறுத்துகிறது. வாழை இலை, தேங்காய் ஓடு, மூங்கில் பொருட்கள் போன்ற இயற்கைப் பொருட்களும் சுகாதாரமான மாற்று வழிகளாகும். 

மக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு உணவு வியாபாரியின் கையிலும் உள்ளது. செய்தித்தாள் பொட்டலப் பழக்கத்தை உடனடியாக கைவிட்டு, சுகாதாரமான முறையில் உணவு வழங்கி, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். இந்த எச்சரிக்கையை அனைவரும் பரவலாகப் பகிர்ந்து, சுகாதார உணர்வை ஏற்படுத்த வேண்டும். 

இதையும் படிங்க: செங்கடலில் இஸ்ரேலிய கப்பல் போக்குவரத்துக்கு தடை..!! ஹவுதி அமைப்பின் புதிய எச்சரிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share