சுகர் மாத்திரைக்கு ‘நோ’... விஜய்யை விமர்சித்த மார்க்கண்டேயனுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த போலீஸ்...!
இன்று காலை விளாத்திகுளம் போலீசார், மார்க்கண்டேயனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் திமுக பொதுக்கூட்டத்தில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவர் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில், இன்று காலை விளாத்திகுளம் போலீசார், மார்க்கண்டேயனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, காவல்துறை வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல விடாமல், திமுக நிர்வாகிகளும், அவரது உறவினர்களும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் திமுக-காங்கிரஸ் நேரடி மோதல்? ஆகஸ்டில் ‘அணுகுண்டு’ வெடிக்கும் என பிரவீன் சக்கரவர்த்தி பரபரப்பு!
இதையடுத்து, போலீசார் பாதுகாப்புடன் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று, நேரடியாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தற்போது, அங்கு டி.எஸ்.பி. தலைமையில் மார்க்கண்டேயனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை மிரட்டல், அவமதிப்பு பேச்சு, அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே மார்க்கண்டேயனுக்கு நீரழிவு நோய் இருப்பதால், அவரது ஆதரவாளர்கள் அதற்கான மாத்திரையைக் கொண்டு வந்துள்ளனர். ஆனால் அதனை மார்க்கண்டேயனுக்கு கொடுக்க மறுத்த போலீசார், அவரது ஆதரவாளர்களையும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புகள் (பேரிகார்டுகள்) அமைக்கப்பட்டுள்ளன.திமுகவினர் அதிக அளவில் அங்கு திரளக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, கூடுதல் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
ஏற்கனவே, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டபோதும், அவரிடம் இதே காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்தான் விசாரணை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, திமுகவினர் அதிக அளவில் அங்கு திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டதுடன், போராட்டங்களும் நடைபெற்றன. பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதேபோன்ற சூழல் மீண்டும் ஏற்படாத வகையில், தற்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவின் நாடாளுமன்ற இருக்கை மாற்றம்..!! பின்னணி என்ன தெரியுமா..??