×
 

"பழனி நில மோசடி சர்ச்சை"... போராட்டத்தில் குதித்த அதிமுகவினர்..! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்..!!

பழனி நில மோசடி விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் பக்தர்களுக்கு மிக முக்கியமான இடமாக விளங்கும் கோவில் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள 1.4 ஏக்கர் நிலம் சமீபத்தில் பெரும் பண மதிப்புடைய மோசடியின் மையமாக மாறியுள்ளது. சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலம், கோவில் நிர்வாகத்திற்குச் சொந்தமானது என்பதை மீறி, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த விவகாரம் தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தொடர்புடைய ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது மேலும் கவனத்தை ஈர்த்தது. பழனி கோவில் அடிவாரத்தில் உள்ள இந்த நிலம் பல ஆண்டுகளாக பக்தர்களின் வாகனங்களுக்கு இலவச பார்க்கிங் வசதியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 

1888-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு தானப் பத்திரத்தின் அடிப்படையில் இந்த நிலம் கோவில் மடத்திற்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உரிமை மதுரை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த நிலத்தைப் பதிவு செய்யக் கூடாது என கோவில் நிர்வாகம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. ஆனாலும், ஜூலை 6, 2026 அன்று இந்த நிலம் தனியாருக்கு ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: பழநி நில மோசடி விவகாரம்... 100% நடவடிக்கை எடுக்கப்படும்... அமைச்சர் நிர்மல் குமார் உறுதி.!.

பழனி சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பில் இருந்த ஜஸ்டின் மணிகண்டன் என்பவர் இந்தப் பதிவை அனுமதித்ததாகவும், அவர் ஒரு நாள் மட்டுமே அங்கு பணியில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, கோவில் நிலப் பிரிவு மேலாளர் எஸ். முருகநாதம் அளித்த புகாரின் அடிப்படையில் பழனி அடிவாரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தமிழ்நாடு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றினார். 

பழனி நில மோசடி விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிபிஐ விசாரணைக்கு இந்த நில மோசடி விவகாரத்தை மாற்ற வேண்டும் என்பதே அதிமுகவின் முதன்மை கோரிக்கையாக உள்ளது. ஏராளமான அதிமுகவினர் பழனியில் திரண்டு நில மோசடி விவகாரத்தை கண்டித்து முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பழனி எம்எல்ஏ ரவி மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

இதையும் படிங்க: பரிதவிப்பு...! ஆந்திராவில் சிக்கிய படகுகள்... காசிமேடு மீனவர்களுக்காக குரல் கொடுத்த EPS..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share