“பிஸ்கட்டை கவ்விக் கொண்டு ஓடும் நாய் போல்...” - அன்வர் ராஜா, ரகுபதியை மறைமுகமாக சாடிய எடப்பாடி...!
குறைக்கிற நாய்க்கு பிஸ்கட் போட்டால் அதை கவ்விக்கொண்டு ஓடும் அது போல் சிலர் இருக்கின்றனர்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா சிலை அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தின் மூலம் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக அவர் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் தங்கி இருந்த விடுதியில் இருந்து அவரை அதிமுகவினர் புடை சூழ ஊர்வலமாக அண்ணா சிலைக்கு அழைத்து வந்தனர். மேலும் அவர் வரும் வழியில் மேளதாளங்கள் முழங்க அலங்கார குதிரை ஆட்டம் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் மக்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, புதுக்கோட்டை மாவட்டம் அதிமுக கோட்டை. திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் முதலமைச்சர்கள் கனவு கண்டு கொண்டு இருக்கின்றனர் அந்த கனவு பகல் கனவாக இருக்கும். 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கின்ற தேர்தலாக இருக்கும்.
புதுக்கோட்டையில் நடைபெறும் இந்த எழுச்சி பயணமே தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகள் ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை நகரத்தை மாநகராட்சியாக ஆக்கியுள்ளனர் அதில் எந்த கருத்தையும் நாங்கள் கூறவில்லை. ஆனால் இந்த மாநகராட்சியோடு 11 ஊராட்சிகள் மாநகராட்சியோடு இணைத்துள்ளனர். அப்படி இணைத்துவிட்டு வீட்டு வரி குடிநீர் வரி உயர்த்துவார்கள் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் அவர்களுக்கு போய்விட்டது. கட்டடம் கட்ட வேண்டும் என்றாலும் அனுமதி வாங்க வேண்டும் கடினமான ஒன்றாக இருக்கும். இப்படிப்பட்ட ஆட்சி தேவையா.
இதையும் படிங்க: ஒரு ப்லொவ்ல வந்திருக்கும்... மு.க.ஸ்டாலினை ஒருமையில் பேசியதற்கு எடப்பாடி கொடுத்த தக் பதில்...!
ஏற்கனவே நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துங்கள் அது பரவாயில்லை. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் பாதிக்கும் அளவிற்கு 11 ஊராட்சிகளை மாநகராட்சிகளோடு இணைத்து மக்களை வாட்டி வதைக்கின்ற இந்த அரசு தேவையா. அதிமுக ஆட்சி இருக்கும்போது பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றோம்.
புதுக்கோட்டை மாவட்டம் வறட்சியான பகுதி விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் பொதுமக்கள் வளமோடு செழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காக காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை கொண்டு வந்தோம் 14,400 கோடி திட்டம் அறிவித்தோம் முதற்கட்டமாக 700 கோடியை கொடுத்து நானே அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தேன்.
அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் கண்மாய்களில் நீர் நிலை பெருகி நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து குடிநீர் பிரச்சனை இருந்திருக்காது. அந்தத் திட்டத்தை முடக்கிய அரசு தேவையா? அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் பொன் விளைகின்ற பூமியாக இருந்திருக்கும். அனைத்துமே இந்த ஆட்சியில் போய்விட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி உங்கள் மூலமாக மலரும் பொழுது காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் தொடரும்.
புதுக்கோட்டை மாநகரத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் தற்போது தண்ணீர் வருகிறது அதிமுக ஆட்சி காலத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வந்தது. இப்படிப்பட்ட ஆட்சி தேவையா சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எந்த ஆட்சி மக்களுக்கு நன்மை செய்தது எந்த ஆட்சி நல்ல ஆட்சி என்பதை சிந்தித்துப் பாருங்கள். வருகின்ற 2026 தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தாருங்கள்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்து திறந்தது அதிமுக அரசு. தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை எப்படி மேற்கொள்கிறார்களோ அப்படி ஒரு சிகிச்சையை அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்தோம். புதுக்கோட்டைக்கு பல் மருத்துவக் கல்லூரியையும் கொடுத்தோம். அதிமுக ஆட்சிக்காலத்தில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தன்னிறைவு பெற்றுவிட்டது கல்வியில் சிறந்து விளங்கியது. அதிகமாக கல்லூரிகளை திறந்து அரசாங்கம் அதிமுக அரசு.
ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை 20 கோடியில் கொடுத்துள்ளோம். புதுக்கோட்டையில் வசிக்கக்கூடிய மக்களுக்கு நல்ல மருத்துவ வசதியை ஏற்படுத்திக் கொடுத்த அரசாங்கம் அதிமுக அரசு. இங்கு இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றனர் அதில் ஒருவர் அதிமுகவிலிருந்து ஓடியவர்.
குறைக்கிற நாய்க்கு பிஸ்கட் போட்டால் அதை கவ்விக்கொண்டு ஓடும் அது போல் சிலர் இருக்கின்றனர். அதிமுக தொண்டர்கள் உடம்பில் ஓடுவது எம்ஜிஆரின் இரத்தம். இங்கிருந்து ஓடியவர்தான் அமைச்சர் ரகுபதி. இங்கு இருப்பவர்கள் உழைத்து அவருக்கு எம்எல்ஏ அமைச்சர் என்ற பதவியை கொடுத்தது அதிமுக. அந்த அடையாளத்தை வைத்து தான் மாற்றுக் கட்சிக்கு சென்று ஏற்கனவே இருந்த கட்சியை விமர்சனம் செய்கிறீர்கள் இது மிகப் பெரிய அயோக்கியத்தனம் நன்றி கெட்ட தனம்.
அதிமுக என்ற கட்சியில் இருப்பதால்தான் எம்எல்ஏ ஆனார். அமைச்சர் ஆனீர்கள். நீங்கள் பேசுவதை பற்றி கவலை இல்லை நல்ல மனிதர்கள் பேசினால் எடுத்துக் கொள்ளலாம் மனிதருக்கு சூடு சொரணை வேண்டும் எதுவுமே இல்லாமல் பேசுபவர்கள் பற்றி கவலை பட கூடாது.
அதிமுக என்ற இயக்கத்திற்காக உழைத்துக் கொண்டிருப்பவர் தான் மனிதன். உண்மையான மனிதன். மனிதனாக பிறந்தால் மட்டும் போதாது அதற்குண்டான தகுதியை பெற வேண்டும். அது அதிமுக தொண்டனுக்கு உள்ளது. இங்கிருந்து சென்ற ரகுபதி மனிதன் என்ற தகுதியை இழந்துவிட்டார்.
இதையும் படிங்க: விசிக, தவெகவை கூட்டணிக்கு வாங்க, வாங்கன்னு கூப்பிட்டேனா? - பொறிந்து தள்ளிய எடப்பாடி பழனிசாமி...!