Mr.விஜய்...! 'டீலா... நோ டீலா?' - தவெகவில் இணைய விஜயபாஸ்கர் வைத்த டிமாண்ட்... என்ன தெரியுமா?
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெகவில் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தலைமையிடம் டீல் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மே 10ஆம் தேதி விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
அதன் பின்னர், மே 13ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதையடுத்து, கட்சியின் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாகக் கூறி, சி.வி. சண்முகம் தரப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரிடம் மனு அளித்தது.
இதையும் படிங்க: இபிஎஸ் உடன் சண்டையா? சமாதானமா?... இரவோடு இரவாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எடுத்த அதிரடி முடிவு...!
இதனைத் தொடர்ந்து, சி.வி. சண்முகம் அணியைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
அதே நேரத்தில், சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மன்னிப்புக் கடிதம் வழங்கியதாக கூறப்பட்டது. மேலும், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நான்கு பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் பேரவைத் தலைவரிடம் கடிதம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த சூழ்நிலையில்தான், தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
ராஜினாமாவைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், "தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவால் நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும் சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத மனவேதனையுடன் இயக்கத்திலிருந்து விலகினாலும், என் மண்ணுக்கும் மக்களுக்கும் நான் ஆற்றும் வாழ்நாள் சேவை தொடர்ந்து நீடிக்கும்" என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், எம்.பி.பி.எஸ். படித்த காலத்திலேயே அதிமுக மாணவர் அணியில் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடங்கினார். பின்னர், 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக வெற்றி பெற்றார்.
தொகுதி மறுசீரமைப்பின் மூலம் விராலிமலை தொகுதி உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2011 முதல் 2026 வரை நடைபெற்ற நான்கு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்றார். அதிமுக ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
அதிமுகவில் பல்வேறு நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டபோது, சி. விஜயபாஸ்கர் வகித்த வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு பதிலாக வி. பழனிவேல் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து விரக்தியடைந்த விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அளவில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சிகளிலும், அதிமுகவின் சின்னம் மற்றும் முக்கிய தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அவர் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. எனினும், கட்சித் தலைமையை நேரடியாக விமர்சிக்கவில்லை.
இந்நிலையில், அவரது ஆதரவாளர்களில் மூவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, விஜயபாஸ்கர் மறைமுகமாக கட்சித் தலைமையை விமர்சித்து வந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஜூன் 22ஆம் தேதி முதல்வர் விஜயின் பிறந்தநாள் விழா பனையூரில் நடைபெற உள்ளது. அந்நிகழ்வில் விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், கூட்டாக ராஜினாமா செய்வதை விட தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்ற நோக்கில், தனியாக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதோடு, விராலிமலை தொகுதி மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முக்கிய நிர்வாகிகளுடனும் விஜயபாஸ்கர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விராலிமலை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறக்கூடிய சூழ்நிலையை முன்னிட்டு, அதற்கான ஆரம்பகட்ட பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து விலகும் முடிவை எடுத்திருப்பதை அறிந்ததும், திமுக தரப்பிலிருந்தும் அவரை அணுகியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் எந்தத் தரப்புக்கும் உறுதியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், "இடைத்தேர்தல் செலவுகளை நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வெற்றி பெற்றால் அமைச்சர் பதவி வழங்க வேண்டும்" என்ற கோரிக்கையை விஜயபாஸ்கர் தரப்பு முன்வைத்ததாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைத்த பின்னரே அவர் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி நகர்ந்ததாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
விஜயபாஸ்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 42 ஆகக் குறைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: சி.விஜயபாஸ்கர் மட்டும் வேணாமே! ப்ளீஸ்! ஊழல் புகார்கள் காரணமாக தவெகவில் எழும் எதிர்ப்புக் குரல்!