×
 

இதுதான் ப்ளான் மிஸ் பண்ணிடாதீங்க! இபிஎஸ்-யிடம் பாஜக தலைவர்கள் கொடுத்த ப்ளூ பிரிண்ட்!

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா சந்தித்துப் பேசினார். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள பழனிசாமி இல்லத்தில் நடந்த இச்சந்திப்பின்போது, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் உடனிருந்தார்.

வரும் 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணியை வலுப்படுத்த, இரு கட்சி தலைவர்களிடையே முக்கிய சந்திப்பு நடைபெற்றது. பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, மத்திய அமைச்சர் முரளிதர் மோஹல் ஆகியோர், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (அக்டோபர் 7) காலை சந்தித்துப் பேசினர். இச்சந்திப்புக்கு தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் உடன் இருந்தார்.

கடந்த 2024 லோக்சபா தேர்தலில் தனித்தனி அணிகளாகப் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., ஆகியவை, ஏப்ரல் 11 அன்று கூட்டணியை அறிவித்தன. ஆறு மாதங்களாக இக்கூட்டணியில் வேறு கட்சிகள் சேரவில்லை. இந்நிலையில், 2026 தேர்தலுக்கு பா.ஜ., மேலிடம் பைஜெயந்த் பாண்டா, முரளிதர் மோஹல் ஆகியோரை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது. 

முதல் முறையாக சென்னை வந்த இவர்கள், நேற்று முன்தினம் (அக்டோபர் 5) பா.ஜ., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை நேற்று முன்தின இரவு சந்தித்து நலம் விசாரித்தனர்.

இதையும் படிங்க: தவெகவுக்கு TOUGH கொடுக்கணும்! பலத்தை காட்டணும்! இளைஞரணிக்கு உதயநிதி கொடுத்த சீக்ரெட் ஆர்டர்!

கரூர் சம்பவம் குறித்த விவாதம்
பழனிசாமி சந்திப்பின்போது, பைஜெயந்த் பாண்டா, "கரூர் துயர சம்பவத்துக்கு பின்னணியில் தி.மு.க., இருப்பதை பா.ஜ., வெளியே எடுத்துச் சொல்லி அரசியல் செய்த அளவுக்கு, அ.தி.மு.க., செய்யவில்லை" என வருத்தத்துடன் தெரிவித்தார். 

இதை ஏற்க மறுத்த பழனிசாமி, "முதன் முதலில் இந்த விஷயத்தை கையில் எடுத்து, கரூர் சம்பவத்தின் பின்னணியில் தி.மு.க., தான் உள்ளது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் உள்ளார் என அரசியல் அரங்கு மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் குற்றச்சாட்டு உள்ளது" என விளக்கினார்.

அவர் தொடர்ந்து கூறினார்: "கள்ளக்குறிச்சி துயர சம்பவத்துக்கு மக்களை சந்தித்து ஆறுதல் கூறச் செல்லாத தமிழக முதல்வர் ஸ்டாலின், கரூருக்கு மட்டும் இரவோடு இரவாக வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியது ஏன்? அதேபோல, துபாய்க்கு உல்லாசப் பயணம் போன தமிழக துணை முதல்வர் உதயநிதி, கரூர் சம்பவம் நடந்ததும் அவசர அவசரமாக துபாயில் இருந்து சிறப்பு விமானம் வாயிலாக ஓடோடி வந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். 

பின், அதே சிறப்பு விமானத்தில் துபாய்க்கு சென்று விட்டார். உல்லாசப் பயணம் போகும் நபரெல்லாம் துணை முதல்வர் ஆகி இருப்பது தமிழகத்துக்கான சாபக் கேடு; துரதிருஷ்டம். இத்தனை பெரிய சம்பவம் நடந்த பின், கூடவே இருந்து ஆறுதல் சொல்லாததோடு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளாதவரெல்லாம் துணை முதல்வரா? என நான் தான் தி.மு.க., தரப்பை கேள்வி மேல் கேள்வி கேட்டு, அரசுக்கும் முதல்வருக்கும் கடும் நெருக்கடி ஏற்படுத்தினேன்." என விளக்கினார்.

இரு தரப்பினரும், கரூர் விவகாரத்தை நீண்ட காலத்துக்கு அரசியல் ரீதியில் பிரசார ஆயுதமாக பயன்படுத்துவது என முடிவு செய்தனர். கரூர் சம்பவத்தால் தமிழக அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள், நடப்பு அரசியல் நிலவரம் குறித்தும் விரிவாகப் பேசினர்.

கூட்டணி விரிவாக்கம் மற்றும் பிரச்சாரம்
சந்திப்பில், அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணியில் மேலும் பல கட்சிகளை இணைப்பது, குறிப்பாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.,) உடன் கூட்டணி அமைப்பது, பிரச்சார வியூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டணி, தி.மு.க., ஆட்சிக்கு எதிராக ஒற்றுமையான முகமாக செயல்பட வேண்டும் என இரு தரப்பும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர். 

பின்னர், வரும் சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரப் பயணத்தை அக்டோபர் 12 அன்று மதுரையில் இருந்து தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் தொடங்குகிறார். இக்கூட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பதோடு, அ.தி.மு.க., தொண்டர்களையும் அதிக அளவில் பங்கேற்க வைக்க வேண்டும் என பா.ஜ., தலைவர்கள் பழனிசாமியிடம் வேண்டுகோள் விடுத்தனர். "கட்சியினருக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது; கட்சி நிர்வாகிகளுக்கு மீண்டும் அறிவுறுத்தப்படும்" என பழனிசாமி உறுதியளித்தார்.

இந்த சந்திப்பு, 2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) தமிழகத்தில் வலுவான இருப்பை உறுதி செய்யும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.  கரூர் சம்பவத்தை (செப்டம்பர் 27 அன்று நடிகர் விஜயின் த.வெ.க., பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவம்) தி.மு.க., ஆட்சியின் தோல்வியாகக் காட்டி, எதிர்க்கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளன.  இந்தக் கூட்டணி, தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கரூர் சம்பவத்தில் CBI விசாரணை! விஜய்க்கு நிம்மதி! களமிறங்கியது பாஜக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share