இடைத்தேர்தலை குறிவைக்கும் அதிமுக! வேட்பாளர்களை தேர்வு செய்ய பழனிசாமி ஆலோசனை! நிர்வாகிகளுக்கு டார்கெட்!
இளைஞர்களை அதிகளவில் ஒருங்கிணைத்து பணியாற்றவும், வெற்றிக்கான வாய்ப்புள்ள வேட்பாளர்களை தேர்வு செய்யவும் அவர் அறிவுறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சென்னை: தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் இடைத்தேர்தலை முன்னிட்டு, ஆறு தொகுதிகளிலும் அ.தி.மு.க., மிகப்பெரிய வெற்றியை பெறும் என அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளை இப்போதே தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலர்கள் கூட்டம் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தேர்தல் நிலவரம், உள்ளாட்சி தேர்தல் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. துணை பொதுச்செயலர்கள் வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் பேசிய பழனிசாமி, த.வெ.க., சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி தேர்தலில் வெற்றி பெற்றதாக விமர்சித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். தற்போது நடைபெற உள்ளதாக கூறப்படும் ஆறு இடைத்தேர்தல் தொகுதிகளும் ஏற்கனவே அ.தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதால், அங்கு மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அவர் கூறியதாக தெரிகிறது.
இதையும் படிங்க: அதிமுகவில் திடீர் பரபரப்பு! மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்த முக்கிய நிர்வாகிகள்! இபிஎஸ் கோவம்!
மேலும், பதவியை ராஜினாமா செய்து வேறு கட்சிக்கு சென்றவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், இதனால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் பழனிசாமி கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதனிடையே அம்பாசமுத்திரம், மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளின் மாவட்ட செயலர்களை தனித்தனியாக அழைத்து பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இடைத்தேர்தலுக்கான சாத்தியமான வேட்பாளர்களை தேர்வு செய்து பரிந்துரைக்குமாறும் அவர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலையும் எதிர்கொள்ள கட்சியை தயார்படுத்த வேண்டும் என்றும், மக்கள் சந்திப்பு, ஆர்ப்பாட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பழனிசாமி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இளைஞர்களை அதிகளவில் ஒருங்கிணைத்து பணியாற்றவும், வெற்றிக்கான வாய்ப்புள்ள வேட்பாளர்களை தேர்வு செய்யவும் அவர் அறிவுறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் துணை பொதுச்செயலர் முனுசாமி, விஜயை பிரதமர் வேட்பாளராக குறிப்பிடுவது குறித்து விமர்சனமாக கருத்து தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் செயற்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும், அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் பழனிசாமி தெரிவித்ததாக கட்சி நிர்வாகிகள் கூறினர்.
இதையும் படிங்க: எடப்பாடியின் அடுத்த அதிரடி..!! ஒன்றுசேரும் அதிமுகவினர்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா கழகம்..??