×
 

சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் நீக்கம்... அதிமுகவில் மீண்டும் வெடித்த உள்கட்சி மோதல்!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த முடிவு, விழுப்புரம் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் பசுபதி ஆதரவாளர்களுக்கும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறி, கார் மீது கல்வீச்சு, மறியல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கட்சித் தலைமை ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், ஒழுங்கு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை அதிமுகவின் உள்கட்சி அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி அனுமதி இல்லாமல் யாரையும் கட்சியில் சேர்க்கக் கூடாது! அதிமுகவில் அதிரடி உத்தரவு!

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடைபெற்றன. அப்போது கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகி, எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி அணிகள் தனித்தனியாக செயல்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அந்த அணிகள் மீண்டும் ஒன்றிணைந்தன. அதே நேரத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் பின்னர் தவெகவில் இணைந்தனர். ஆனால், சி.வி. சண்முகமும் எஸ்.பி. வேலுமணியும் அதிமுகவிலேயே தொடர்ந்து உள்ளனர்.

இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி. சண்முகம் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், விழுப்புரம் சம்பவத்தைத் தொடர்ந்து சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை, அதிமுகவின் எதிர்கால உள்கட்சி அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

 

இதையும் படிங்க: யாரும் கவலைப்பட வேணாம்! நல்ல எதிர்காலம் நமக்கு நிச்சயம்! நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share