"துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!
கழகத்தில் பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு, இன்று துரோகம் செய்பவர்களின் எண்ணம் ஈடேறாது; சோதனைகளை முறியடித்து மீண்டெழுவோம் என்று அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தற்போது ஏற்பட்டுள்ள தற்காலிகச் சோதனையைக் கண்டு கழக நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி கழகத் தொண்டர்கள் யாரும் தயவுசெய்து மனம் தளர வேண்டாம்; எவ்வித விபரீதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம்" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தொண்டர்களுக்கு உருக்கமான அவசர வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தவெக புதிய ஆட்சி அமைத்துள்ள அரசியல் பரபரப்பான சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் தொண்டர்களை நோக்கி ஆற்றியுள்ள இந்த உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அவரது அந்தப் பதிவின் முழு விவரம் வருமாறு:
"நம் இருபெரும் தலைவர்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியோடும், உங்களின் பேராதரவோடும் 'கழகப் பொதுச் செயலாளர்' பொறுப்பினை ஏற்று, இரவு பகல் பாராமல் நான் பணியாற்றி வருகிறேன். பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும், துரோகங்களையும் கழக நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி தொண்டர்களின் துணையோடு எதிர்கொண்டு தொடர்ந்து பயணித்து வருகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகம் 47 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், கழகத்தில் பல்வேறு பதவி சுகங்களை முழுமையாக அனுபவித்துவிட்டு, இன்று கழகத்தையே அழிப்பதற்கான சுயநலச் செயல்களில் ஒருசிலர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது; நமக்கு எப்பொழுதும் நமது தலைவர்களின் தூய்மையான ஆன்மா உறுதுணையாக இருக்கும்.
இதையும் படிங்க: அரசியல் கட்சி கூட்ட விபத்துக்கு அரசு ஏன் பணம் தரணும்? உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி!
கழகம் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் இருந்து மிகக் கம்பீரமாக மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் நான் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறேன். இதற்குப் பாசத்திற்குரிய கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களது முழு ஒத்துழைப்பை நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். 'எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்' என்ற இதய தெய்வம் அம்மா அவர்களின் தீர்க்கதரிசன எண்ணவோட்டத்தை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மெய்ப்பித்துக் காட்டுவோம். எனவே, தற்போதைய சூழ்நிலையை எண்ணி எவ்வித அச்சத்திற்கும், பதற்றத்திற்கும் யாரும் ஆளாக வேண்டாம். களப்பணி ஆற்றுவோம்! கழகம் காப்போம்!" என்று எடப்பாடி பழனிசாமி மிக ஆவேசமாகவும் உருக்கமாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தோல்விக்குப் பின் அதிமுக-வுக்குள் உள்கட்சி சலசலப்புகள் எட்டிப்பார்க்கும் வேளையில், இபிஎஸ்-சின் இந்த 'துரோகம்' குறித்த அதிரடிப் பதிவு தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது அதிமுக..!! முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம்..!!