×
 

“வெற்றி பெற்றே ஆக வேண்டும்”..!! இடைத்தேர்தல் களத்தில் அதிமுகவின் தீவிர ஆதரவு வேட்டை!!

திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை தவெகவைத் தோற்கடித்துப் பாடம் புகட்ட வேண்டும் என்ற இலக்குடன் தயாராகின்றன.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இரு பிரிவாகப் பிரிந்து நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு குழு அரசுக்கு ஆதரவாகவும், மற்றொரு குழு எதிராகவும் வாக்களித்தது. இதனால் ஏற்பட்ட அரசியல் பரபரப்பில் மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட ஆறு தொகுதிகளின் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவி ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். 

குதிரைப் பேரம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், அந்த எம்.எல்.ஏ.க்கள் அதிமுக-திமுக கூட்டணி திட்டத்தால் தான் விலகியதாகக் கூறினர். முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்ததால் மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாயின. ஆனால் ஐந்து தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவற்றுக்கு இடைத்தேர்தல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்; அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். செப்டம்பர் 9 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி 16ஆம் தேதி வரை நீடிக்கும். தவெக அரசின் முதல் இடைத்தேர்தல் என்பதால் அரசியல் கட்சிகள் இதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை தவெகவைத் தோற்கடித்துப் பாடம் புகட்ட வேண்டும் என்ற இலக்குடன் தயாராகின்றன.

இதையும் படிங்க: எடப்பாடியின் அடுத்த அதிரடி..!! ஒன்றுசேரும் அதிமுகவினர்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா கழகம்..??

அதிமுக இந்த இரு தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களமிறக்க முடிவு செய்துள்ளது. முன்னதாக இவை அதிமுக வென்ற தொகுதிகள் என்பதால் கட்சி தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க விரும்புகிறது. இதற்காக கூட்டணிக் கட்சியான பாஜகவிடம் ஆதரவு கோரி அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சென்னை கமலாலயத்தில் நயினார் நாகேந்திரனைச் சந்தித்து கடிதம் அளித்தனர். 

இந்தச் சந்திப்பு அதிமுக-பாஜக உறவை மீண்டும் பலப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது. விருப்ப மனுக்கள் நாளை மாலை வரை பெறப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தல் தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.

இதையும் படிங்க: அதிமுகவிலிருந்து திடீர் விலகல்! அந்தியூர் முன்னாள் எம்.எல்.ஏ. இ.எம்.ஆர்.ராஜா அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share