ரெண்டே நாள் பொறுங்க!! நல்ல செய்தி வரும்!! கட்சி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் நம்பிக்கை!!
'இரு நாட்களில் நல்ல செய்தி வரும்; காத்திருங்கள்' என, புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்களிடம், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
புதுச்சேரி: தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் நிலையில், அ.தி.மு.க.வின் 46 எம்.எல்.ஏ.க்களும் புதுச்சேரி பூரணாங்குப்பம் ஆர்.கே.என். சொகுசு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அக்கட்சி பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம், “இரு நாட்களில் நல்ல செய்தி வரும், காத்திருங்கள்” என நம்பிக்கை அளித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை புதுச்சேரி ரிசார்ட்டுக்கு வருமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியது.
நேற்று முன்தினம் இரவிலிருந்தே பலர் அங்கு தங்கினர். நேற்று ஓ.எஸ். மணியன், தளவாய் சுந்தரம், மோகன், சொர்ணத்தூர் ராஜேந்திரன், அருண்மொழிதேவன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வெங்கடாசலம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்கள் ரிசார்ட்டுக்கு வந்து சேர்ந்தனர். புதுச்சேரி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சர் பதவி நமக்குத்தான்! அதிமுக எம்.எல்.ஏ-க்கள் உற்சாகம்! புதுச்சேரி ரிசார்ட்டில் கொண்டாட்டம்!
நேற்றிரவு 7:15 மணிக்கு பழனிசாமி ரிசார்ட்டுக்கு வந்தார். அவர் முதலில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். நந்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, கரூர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10 முக்கிய நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். அதன் பின்னர் இரவு 7:25 மணிக்கு எம்.எல்.ஏ.க்களை தனித்து சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு இரவு 8:15 மணி வரை நீடித்தது.
எம்.எல்.ஏ.க்களிடம் பழனிசாமி பேசுகையில், “உங்களுக்கு இரண்டு நாளில் நல்ல செய்தி வரும். வரும் 10-ம் தேதி வரை இங்கேயே தங்கியிருங்கள்” என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆலோசனை முடிந்து இரவு 8:20 மணிக்கு பழனிசாமி காரில் புறப்பட்டுச் சென்றார். ஆனால் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ரிசார்ட்டிலேயே தங்கியுள்ளனர்.
த.வெ.க. உள்ளிட்ட கட்சிகளுடன் ஆட்சி அமைப்பு தொடர்பான பேச்சுகள் நடைபெற்று வரும் நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் தங்க வைத்து கட்சித் தலைமை உஷார் நிலையில் உள்ளது. அமைச்சர் பதவி உள்ளிட்ட எதிர்கால வாய்ப்புகள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் இப்போது உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.
தமிழக அரசியல் தற்போது மிக முக்கியமான கட்டத்தில் இருப்பதால், அடுத்த இரு நாட்களில் என்ன முடிவு எட்டப்படும் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சர் பதவி நமக்குத்தான்! அதிமுக எம்.எல்.ஏ-க்கள் உற்சாகம்! புதுச்சேரி ரிசார்ட்டில் கொண்டாட்டம்!