×
 

இறங்கி வராத பழனிசாமி! ஓங்கியதா ஓபிஎஸ் கை? அடுத்தடுத்து விலகும் தலைவர்கள்?! அதிமுகவில் அச்சம்!

தேர்தல் நெருக்கத்திலும், பழனிசாமி தன் நிலையில் இருந்து இறங்கி வராத நிலையில், தன்னுடைய அரசியல் எதிர்காலம் கருதி, பன்னீர்செல்வம் தி.மு.க.,வுக்கு சென்று விட்டார்.

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடங்கிய உள் குழப்பம் இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்க மறுத்த தலைவர்கள் ஆளுக்கொரு திசையில் சென்று விட்டனர். வரும் 2026 சட்டமன்றத் தேர்தல், கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தலாக மாறியுள்ளது.

சில மாதங்களுக்கு முன், மூத்த தலைவர் செங்கோட்டையன் "பிரிந்து சென்ற அனைவரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்" என்று பழனிசாமிக்கு காலக்கெடு விதித்தார். இதனால் கோபமடைந்த பழனிசாமி, செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கினார். அதன் பிறகு செங்கோட்டையன் கடந்த நவம்பரில் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்தார்.

டி.டி.வி. தினகரன் நீண்டகாலமாக "பழனிசாமியை முதல்வராக ஏற்க மாட்டேன்" என்று கூறி வந்தார். ஆனால் பாஜக தலைவர்களை சந்தித்து, என்டிஏ கூட்டணியில் இணைந்தார். சசிகலா தனிக் கட்சி தொடங்குவதாக அறிவித்து, த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க காய் நகர்த்தி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயாராகி வருகிறார்.

இதையும் படிங்க: அதிமுக - அமமுக பூசல்! ஒட்டாமல் தொடரும் உறவு?! பாஜக அழுத்தம் கொடுத்தும் நோ யூஸ்?!

இப்படி பழனிசாமி தலைமைக்கு சவால் விட்டவர்கள் அனைவரும் வெவ்வேறு பக்கம் சென்று விட்டனர். இதனால் கட்சியில் பழனிசாமியின் தலைமை உறுதியாகியுள்ளது. ஆனால் பிரிந்து சென்றவர்களால் தென் மாவட்டங்கள், திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு பிரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இது தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் அதிமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடையே பரவியுள்ளது.

அ.தி.மு.க. பலமான கட்டமைப்பு கொண்ட கட்சி என்றாலும், ஒவ்வொரு தலைவரும் தொண்டரும் முக்கியம் என்பதால் தான் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு "அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்" என்ற குரல் எழுந்தது. 

ஆனால் அந்த குரலை எழுப்பியவர்களை பழனிசாமி எதிரியாகவே பார்த்து நீக்கினார். பன்னீர்செல்வம் மட்டும் தொடர்ந்து ஒற்றுமைக்கு குரல் கொடுத்து வந்தார். ஆனால் தேர்தல் நெருங்கிய நிலையில் பழனிசாமி இறங்கி வராததால், தனது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திமுகவில் இணைந்தார்.

பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததை அதிமுக தலைமை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், அது பெரிய பாதிப்பு இல்லை என்று அர்த்தமாகியிருக்கும். ஆனால் அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள், கொந்தளிப்பு எழுந்துள்ளது. இது தேர்தலில் தென் மாவட்ட ஓட்டுகளில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தின் வெளிப்பாடு என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

2026 தேர்தல் அ.தி.மு.க.வுக்கு "ஒற்றுமை அல்லது பிரிவு" என்ற முடிவெடுக்கும் தேர்தலாக மாறியுள்ளது. பிரிந்த தலைவர்களால் ஏற்படும் வாக்கு பிரிவு, கட்சியின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் என்ற அச்சம் தொண்டர்களிடையே ஆழமாக பரவியுள்ளது.

இதையும் படிங்க: ஒரு கட்சியையும் விடாதீங்க! மெகா கூட்டணிக்கு ஸ்டாலின் திட்டம்! தேஜ கூட்டணியின் வாக்குகளை மொத்தமாக அள்ளும் திமுக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share