×
 

சும்மா விட மாட்டோம்! தலைகீழாக கட்டி தொங்க விடுவோம்!! ஜாக்கிரதை!! மத்திய அமைச்சர் அமித் ஷா வார்னிங்!

''மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் ஈடுபடுவோரை சும்மா விட மாட்டோம். தலைகீழாக கட்டி தொங்க விடுவோம்,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா எச்சரித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு வன்முறையில் ஈடுபடுவோரை சும்மா விட மாட்டோம், தலைகீழாக கட்டி தொங்க விடுவோம் என்று அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் 294 சட்டசபைத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை (ஏப்ரல் 23) முதல் கட்டமாக 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தப் பகுதிகளில் பசிம் பர்தமான் உள்ளிட்ட பல மாவட்டங்கள் அடங்கும்.

பசிம் பர்தமான் மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், “மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கும் மாதம் 3,000 ரூபாய் உதவி அளிக்கப்படும். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலப்பட்டா வழங்கி, அவர்களின் தினசரி ஊதியத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் 500 ரூபாய்க்கு மேல் உயர்த்துவோம்” என்று வாக்குறுதி அளித்தார்.

இதையும் படிங்க: மேற்குவங்க தேர்தல் விறுவிறு! பவானிபூரில் முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு!!

மேலும், மம்தா அரசு பழங்குடியினர் மற்றும் வட மாவட்டங்களின் வளர்ச்சிக்கு வெறும் 2,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியிருப்பதாகவும், ஆனால் மதரசாக்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினருக்காக 5,700 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இது அப்பட்டமான பாரபட்சம் என்றும், ஓட்டு வங்கி அரசியல் என்றும் அவர் விமர்சித்தார். சந்தேஷ்காலி சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அமித் ஷா, பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் பெண்களைத் துன்புறுத்தியவர்களைத் தேடிப் பிடித்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றார்.

தேர்தலுக்குப் பிறகு யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை சும்மா விட மாட்டோம், தலைகீழாக கட்டி தொங்க விடுவோம் என்று கடுமையான எச்சரிக்கையும் விடுத்தார். இந்தப் பேச்சு தேர்தல் சூழலை இன்னும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

இதனிடையே, தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. நாளை முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் 152 தொகுதிகளில் இருசக்கர வாகனப் பேரணிக்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இருசக்கர வாகனங்கள் சாலையில் செல்ல அனுமதி இல்லை. 

மருத்துவ அவசரம் மற்றும் குடும்ப சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படும். பகல் நேரத்திலும் இரு பேர் சேர்ந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளி மாணவர்கள், மருத்துவ அவசரம் மற்றும் ஓட்டுப்பதிவு நாளில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பின் இருக்கையில் அமர்ந்து செல்ல அனுமதி உண்டு. இந்தக் கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சுதந்திரமான, அமைதியான தேர்தலை உறுதி செய்ய எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மக்கள் நாளை தங்கள் ஓட்டுரிமையை அச்சமின்றி பயன்படுத்த வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனு கூட சாப்பிட முடியாது!! உணவு அரசியலை புகுத்திவிடும்!! மம்தா நேரடி தாக்கு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share