×
 

ஜகா வாங்கிய அண்ணாமலை, டிடிவி! ஆக்‌ஷனில் இறங்கிய அமித்ஷா! தேஜ கூட்டணி நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அனைவரும் போட்டியிட வேண்டும் என அமித் ஷா உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்கும் நோக்கில் பா.ஜ.க. வியூகங்களை தீவிரமாக வகுத்து வருகிறது. இதற்காக 2025 ஏப்ரல் 11 அன்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. அதைத் தொடர்ந்து பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் தே.ஜ.கூட்டணியில் இணைந்தன. தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்ற கட்சிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

ஆனால், கூட்டணி கட்சிகளில் சில முக்கிய தலைவர்கள் போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளனர். அ.ம.மு.க. பொதுச்செயலர் தினகரன் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.

அதேபோல், பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பாமல், ஆறு தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். இந்த நிலையில், கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அனைவரும் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: தை முடிய 9 நாள் பாக்கி!! முடிவை சொல்லுவாரா ஓ.பி.எஸ்! தவெகவா? தனிக்கட்சியா? திமுகவில் ஐக்கியமா?

அமித் ஷா தனது உத்தரவில், “முக்கிய தலைவர்கள் போட்டியிடாமல் ஒதுங்கினால், கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாது. எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்” என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

2009 லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்த பிறகு, நிதின் கட்கரி தலைவரானார். அதன் பிறகு, வரும் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் முக்கிய தலைவர்கள் அனைவரும் போட்டியிட வேண்டும் என்று கட்சி முடிவெடுத்தது.

இதன்படி 2014 லோக்சபா தேர்தலில் அருண் ஜெட்லி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் களமிறங்கினர். இதே கொள்கையை தொடர்ந்து, சமீபத்தில் டில்லியில் நடந்த பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் நிதின் நபின் இதை நினைவுபடுத்தினார்.

வரும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களிலும் முக்கிய தலைவர்களை களமிறக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே, தமிழகத்தில் தே.ஜ.கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். இந்த உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், தினகரன், அண்ணாமலை போன்ற தலைவர்கள் தங்கள் முடிவை மாற்றுவார்களா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தே.ஜ.கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய தலைவர்களின் பங்கேற்பு அவசியம் என்று பா.ஜ.க. தரப்பு வலியுறுத்தி வருகிறது.

இதையும் படிங்க: முழுமையாகாத கூட்டணி?! தொகுதி பங்கீடு இழுபறி!? தலையை பிய்த்துக் கொள்ளும் திமுக - அதிமுக - தவெக!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share