×
 

இந்து முன்னணியின் செயலை அமமுக வன்மையாக கண்டிக்கிறது.. கொந்தளித்த டிடிவி தினகரன்..!

எங்களின் வழிகாட்டியாக உள்ள பெரியாரையும், அண்ணாவையும் இழிவு செய்வதை ஏற்க முடியாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மதுரையில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்த நிலையில், இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்து வந்தனர். இதனையடுத்து அதிமுகவும் இதற்கு கண்டனம் தெரிவித்தது.  

இந்த நிலையில் சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இந்து முன்னணி மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்து முன்னணியின் செயலை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. எங்களின் வழிகாட்டியாக உள்ள பெரியாரையும், அண்ணாவையும் இழிவு செய்வதை ஏற்க முடியாது. முருக பக்தர்கள் மாநாடு என்று அழைத்துவிட்டு விரும்பத்தகாத காட்சிகளை ஒளிபரப்பி இருக்கக்கூடாது என்று கூறினார். 

இதையும் படிங்க: கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..? காவலர்களை வஞ்சிக்கும் திமுக அரசு.. டிடிவி தினகரன் கடும் சாடல்..!

இதனைத்தொடர்ந்து அவர் ஆசிரியர்களே இல்லாமல் இயங்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது;

திமுக ஆட்சியமைந்த பின்பு ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவிகிதம் சரிவு – திமுக ஆட்சியின் சமூக நீதி நாடகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஆசிரியர்களே இல்லாமல் இயங்கும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள். 

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் திமுக ஆட்சியமைந்த பின் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 20 சதவிகிதம் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 

ஆதிதிராவிட மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கி அவர்களின் கல்வியறிவு விகிதத்தை உயர்த்த வேண்டிய திமுக அரசு, அப்பள்ளிகளுக்கு தேவையான குறைந்தபட்ச ஆசிரியர்களை கூட நியமிக்கத் தவறியதே மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய காரணம் என்ற புகார் எழுந்திருக்கிறது. 

தலைமை ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் என ஆதிதிராவிட பள்ளிகளுக்கு ஒப்பளிப்பு வழங்கப்பட்ட 6, 240 பணியிடங்களில் 1,177 பணியிடங்கள் காலியாக இருப்பதோடு, தஞ்சாவூர், கடலூர், திருநெல்வேலி, விழுப்புரம் என பல்வேறு மாவட்டங்களில் பல பள்ளிகள் ஆசிரியர்களே இல்லாமல் இயங்கி வருவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 

ஆதிதிராவிட மக்கள் அதிகளவு வசிக்கும் பகுதிகளில் நவீன உட்கட்டமைப்புடன் கூடிய பள்ளிகள் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதாக திமுக அரசு விளம்பரம் செய்துவரும் நிலையில், உண்மை நிலை அதற்கு நேர்மாறாக இருப்பதால் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சுமார் 19 ஆயிரம் மாணவர்கள் அப்பள்ளிகளில் இருந்து வேறுபள்ளிக்கு மாற வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது. 

எனவே, சமூகத்தில் பின் தங்கிய நிலையில் இருக்கும் ஆதி திராவிட மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை உயர்த்த தோற்றுவிக்கப்பட்ட ஆதிதிராவிடர் பள்ளிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: மா விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு.. ஆளும் அரசை பிழிந்து ஜூஸ் போட்ட டிடிவி தினகரன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share