×
 

கைநழுவுகிறதா தென் கொரிய கப்பல் கட்டும் நிறுவன முதலீடு? தமிழகத்திற்கு மேலும் ஒரு பின்னடைவு?!

தமிழகத்தில் கப்பல் கட்டும் தளத்தில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள தென் கொரியாவை சேர்ந்த நிறுவனத்துடன், ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் பேச்சு நடத்திஉள்ளார்.

தமிழகத்தில் ரூ.18,000 கோடி முதலீட்டில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ள தென் கொரியாவின் ஹெச்.டி. ஹூண்டாய் நிறுவனத்தை, ஆந்திரப் பிரதேசமும் முதலீட்டுக்காக அணுகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் புதிய அரசியல் மற்றும் தொழில்துறை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த முக்கிய முதலீட்டை தமிழகத்தில் உறுதி செய்ய அரசு தீவிரமாக செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.

உலகின் முன்னணி கப்பல் கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.டி. ஹூண்டாய், 2025 டிசம்பரில் தூத்துக்குடியில் ரூ.18,000 கோடி முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்த முதலீட்டை உறுதி செய்யும் முயற்சியாக, தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் வழிகாட்டி (Guidance) நிறுவன அதிகாரிகள் அடங்கிய குழு கடந்த ஜூன் மாதம் தென் கொரியா சென்று ஹெச்.டி. ஹூண்டாய் நிறுவன நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியது. திட்டத்தை விரைவாக செயல்படுத்துமாறும் அவர்கள் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தில் கூடுதலாக 100 MBBS இடங்களுக்கு அனுமதி! மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!

இதற்கிடையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான நாரா லோகேஷ் தென் கொரியாவில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ஹெச்.டி. ஹூண்டாய் நிறுவன அதிகாரிகளுடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தமிழகத்திற்கு வரவிருந்த முதலீடு ஆந்திராவுக்கு மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து தொழில்துறை அதிகாரிகள் கூறுகையில், முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து அனுமதிகளும் விரைவாக வழங்கப்பட்டு வருவதாகவும், ஹெச்.டி. ஹூண்டாய் நிறுவனத்துடன் தமிழக அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கவலை தெரிவித்துள்ளார். ஹூண்டாய் நிறுவனத்தின் முதலீட்டை தமிழகத்தில் உறுதி செய்ய அரசு உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழில்துறை வளர்ச்சியில் எந்தவித பின்னடைவும் ஏற்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களின் முதலீடுகளை ஆந்திரா ஈர்த்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஹெச்.டி. ஹூண்டாய் நிறுவனத்தின் திட்டம் தமிழகத்திலேயே செயல்படுத்தப்படுமா என்பது தொழில்துறை வட்டாரங்களில் முக்கிய கவனப்பொருளாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: இதான் சான்ஸ்! செட்டில் ஆகிருங்க!! தவெக அமைச்சர்களுக்கு ஆசை காட்டி வசூலை தொடங்கிய பி.ஏ.,க்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share