திருச்செந்தூர் கோவிலில் கிரில் கேட்..! பக்தர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்... எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு..!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் உற்சவர் அருகே கிரில் கேட் போடப்பட்டதை சுட்டிக்காட்டி அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தமிழகத்தின் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றாகும். முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாகக் கருதப்படும் இந்தக் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழாக் காலங்களிலும், விசேஷ நாட்களிலும் பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், கோயில் வளாகத்தில் உள்ள சண்முக விலாச மண்டபம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த மண்டபம் பல நூற்றாண்டுகளாக விவசாய பெருமக்களின் நேர்த்திக்கடன் செலுத்தும் இடமாகவும், உள்ளூர் மக்கள் உற்சவர் தரிசனம் செய்யும் இடமாகவும் பயன்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விவசாயம் செழிக்க வேண்டி வாழைத்தார், நெல், வெற்றிலை, தேங்காய் உள்ளிட்ட விளைபொருட்களை முருகப்பெருமானுக்கு காணிக்கையாகச் செலுத்தி வழிபடும் பாரம்பரியம் இங்கு நிலவுகிறது. மேலும், ஏராளமான திருமணங்கள் இந்த மண்டபத்தின் முன்பாகவே நடைபெறுவது வழக்கம். இவ்வாறு மக்கள் நம்பிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள இடம், சமீப காலமாக இரும்பு கிரில் கேட் போடப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோரிக்கை மற்றும் மனுஇந்தச் சூழலில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு அளித்தார். உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகள் உற்சவரை வழிபடுவதற்கும், காணிக்கை செலுத்துவதற்கும் காலங்காலமாக இருந்துவந்த மரபு தடைபடுவதாகக் குறிப்பிட்ட அவர், இரும்பு கிரில் கேட்டை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், உள்ளூர் மக்களுக்கு தனி நேரம் ஒதுக்கி, ஆதார் அடையாள அட்டை அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரினார். உள்துறை அருகிலுள்ள கேட்டை பலப்படுத்தி பாதுகாப்பை உறுதி செய்யவும் பரிந்துரைத்தார்.
இதையும் படிங்க: அனாதைப் பிணமாக மாற்ற முயற்சியா? சபரிவர்மன் மரணத்தில் வெடித்த சர்ச்சை..! அப்பாவு சரமாரி கேள்வி..!
நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் போராட்ட அறிவிப்புமனு அளித்த பின்னரும் கோயில் நிர்வாகம் மற்றும் இணை ஆணையர் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறும் அனிதா ராதாகிருஷ்ணன், ஜூலை 22ஆம் தேதி 5,000 பக்தர்களைத் திரட்டி பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். பக்தர்களின் நியாயமான கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் தான் தலைமையில் போராட்டம் நடைபெறும் என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: “திமுகவுடன் நட்பு தொடர்கிறது...” - தமிழகமே அதிர அறிவித்த திருமாவளவன்... தவெகவிற்கு செம்ம ஷாக்...!