பள்ளி கட்டடம் இடிந்து மாணவர் பலி! இது விபத்து அல்ல! திமுகவின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலை: அண்ணாமலை!
அரசு பள்ளி கட்டடம் இடிந்து மாணவர் உயிரிழந்தது விபத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. திமுக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலையாகவே கருத முடியும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கொண்டாஞ்சேரி அரசு உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து ஏழாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது திமுக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலை என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “தங்கள் குழந்தையை இழந்து தவிக்கும் மாணவனின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் அரசு பள்ளிகளின் கட்டடங்கள், மேற்கூரைகள், சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருகின்றன” என்று கூறியுள்ளார்.
மேலும், “அரசு பள்ளிகளின் உறுதித்தன்மையை சோதித்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக அரசை பலமுறை வலியுறுத்தியுள்ளோம். சில பள்ளிகள் கட்டடம் இல்லாமல் மரத்தடியில் இயங்கி வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால் முதல்வரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் இதில் எந்த அக்கறையும் காட்டவில்லை” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவின் RIGHT HAND டிடிவி தினகரன்... புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை...!
ஏழை எளிய குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளிகளை திமுக அரசு புறக்கணித்ததன் விளைவே இந்த உயிரிழப்பு என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். “இதை விபத்து என்று எடுத்துக்கொள்ள முடியாது. திமுக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலைதான்.
விளம்பர நாடகங்களை மட்டுமே நடத்தி வரும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரே இதற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். இனியாவது அரசு பள்ளிகளை ஆய்வு செய்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: தெருவுக்கு தெரு டாஸ்மாக்..! ACCIDENT-ல் நம்பர்.1 தமிழ்நாடு... ஆனா இந்த திமுக இருக்கே... விளாசிய அண்ணாமலை...!