×
 

4 வருசம் கூட ஆகல!! அதுக்குள்ள இப்பிடி கோர சம்பவம்!! சமயபுரம் கோயிலில் பெண் பலி!! அரசை விளாசும் அண்ணாமலை!

திருச்சி சமயபுரம் கோவில் மண்டபத்தின் மேற்கூரை விழுந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி முன் மண்டபத்தில் நள்ளிரவில் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு பெண் பக்தர் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்ட அண்ணாமலை, “தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மீது கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு பெண் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, “கடந்த 2022 ஜூலை மாதம் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2023 மற்றும் 2024-ல் பல மண்டபங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால் கும்பாபிஷேகம் நடந்து நான்கு ஆண்டுகள் கூட முழுமையடையாத நிலையில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இது திமுக அரசு ஆலயத் திருப்பணிகளை எந்த லட்சணத்தில் செய்கிறது என்பதற்கான தெளிவான சான்று” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சமயபுரம் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்! கோயில் வளாகத்தில் படுத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

மேலும், “பக்தர்களின் காணிக்கை நிதியை பல கோடிகள் செலவு செய்ததாக கணக்கு காட்டும் திமுக அரசு, உண்மையில் பக்தர்களின் உயிரை எவ்வளவு துச்சமாக நினைக்கிறது என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரியவருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் செய்ததாகக் கூறும் அனைத்து ஆலயத் திருப்பணிகளையும் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை நேரடியாக சுட்டிக்காட்டிய அண்ணாமலை, “கோபாலபுரத்திற்கு முறைவாசல் செய்வதே தனது பணி என்று நினைக்கும் அமைச்சர், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்கு பொதுமக்களிடம் பதில் சொல்ல வேண்டும். இந்த துயரத்திற்குப் பின்னணியில் உள்ள அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தின் மிக முக்கிய சக்தி தலங்களில் ஒன்று. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்கி அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் ஏற்பட்ட இந்த விபத்து பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோவில் பராமரிப்பு குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சமயபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த இரு பெண்கள் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதையும் படிங்க: அப்படியா?!... அதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாதே... அண்ணாமலை பெயரை சொன்னதும் அலர்ட் ஆன வானதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share