அமித்ஷாவுடன் அண்ணாமலை சந்திப்பு! பாஜகவில் இருந்து விலகியது ஏன்? காரணங்களை பட்டியலிட்டதால் பரபரப்பு!
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அமித்ஷாவை அவரது வீட்டில் அண்ணாமலை சந்திப்பு
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அண்ணாமலையின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக தகவல்கள் வெளியான நிலையில், மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷாவை டெல்லியில் அவரது இல்லத்தில் அண்ணாமலை சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக, கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினிடம் தனது விலகல் கடிதத்தை அண்ணாமலை வழங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடைபெற்ற அமித்ஷா சந்திப்பில், கட்சியில் இருந்து விலகும் முடிவுக்கான காரணங்களை அண்ணாமலை விரிவாக விளக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழக பா.ஜ.க.வில் நிலவும் உள்கட்சி விவகாரங்கள், தனக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து அவர் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை, 2011-ஆம் ஆண்டு காவல்துறையில் பணியை தொடங்கினார். கர்நாடக மாநிலத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அவர், பெங்களூரு நகர துணை காவல் ஆணையராகவும் இருந்துள்ளார். பின்னர் 2019-ஆம் ஆண்டு தனது ஐ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்து அரசியலுக்கு வந்தார்.
இதையும் படிங்க: ‘தனிக்கட்சி’... அண்ணாமலையுடன் கரம் கோர்த்த ரஜினி?... மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!
2020-ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த அண்ணாமலை, குறுகிய காலத்திலேயே கட்சியின் முக்கிய முகமாக உருவெடுத்தார். 2021-ஆம் ஆண்டு தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்ற அவர், மாநிலம் முழுவதும் தீவிர அரசியல் பிரசாரங்களை முன்னெடுத்து கட்சியின் ஆதரவு வட்டத்தை விரிவுபடுத்த முயன்றார். 2025 வரை மாநில தலைவராக செயல்பட்ட அவர், சட்டசபை தேர்தலுக்கு முன்பு அதிமுக – பா.ஜ.க. கூட்டணி உருவானபோது அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சட்டசபை தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்கியபோதும், அதை ஏற்காமல் இருந்தது அரசியல் வட்டாரங்களில் அப்போது பேசுபொருளானது. தற்போது அவர் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், அண்ணாமலையின் அடுத்த அரசியல் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: விஜய் Vs உதய் Vs அண்ணாமலை! மாறியது தமிழக அரசியல்களம்!! காத்திருக்கும் சவால்கள் ஏராளம்!