பாஜக தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார் அண்ணாமலை! கட்சியில் பெரிய பதவியா? தனிக்கட்சி துவக்கமா?
அண்ணாமலை பாஜவில் இருந்து விலக உள்ளதாக கூறப்படும் நிலையில், பாஜ தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார்.
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் பதவிக்குப் பிறகு கட்சியில் தனக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்துவரும் அண்ணாமலை, டெல்லி சென்று உயர்மட்டப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் தனிக்கட்சி தொடங்கப் போவதாக பரவிய தகவல்களுக்கு மத்தியில் இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
நேற்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்ட அண்ணாமலை, அங்கு தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளார். இன்று (ஜூன் 2) பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீனை சந்தித்து நீண்ட நேரம் பேசினார். பாஜகவின் மற்ற முக்கிய தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இதுவரை சந்திக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக பாஜக கொடி பொருத்திய காரில் பயணம் செய்யும் அண்ணாமலை, நேற்று சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோது தனது காரில் பாஜக கொடியைப் பொருத்தவில்லை. செய்தியாளர்கள் “தனிக்கட்சி தொடங்கப் போகிறீர்களா?” என்று கேட்டதற்கு, “இரண்டு நாட்களில் அனைத்துக்கும் பதில் சொல்கிறேன்” என்று கூறிவிட்டு சென்றார். இன்று மாலை அவர் சென்னை திரும்ப இருக்கும் நிலையில், முக்கிய அறிவிப்பு ஏதேனும் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? - டெல்லியில் பரபரப்பு மீட்டிங்...!
பாஜகவில் அண்ணாமலைக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது கட்சியினரிடையே நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் விவகாரம். குறிப்பாக, சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு அவரது பங்கு குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வந்தன. தற்போது அவர் தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தில் இருப்பதாக பரவிய செய்திகளுக்கு மத்தியில் டெல்லி மேலிடம் அவரை அழைத்துப் பேசியுள்ளது.
அண்ணாமலையின் இந்த டெல்லி பயணம் மற்றும் அவரது எதிர்கால அரசியல் நகர்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பாஜகவிலேயே தொடரப் போகிறாரா அல்லது புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்யப் போகிறாரா என்பது அடுத்த இரண்டு நாட்களில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: " தலைவா வா... தரணி ஆள வா"...! தாமரை சின்னம் இல்லாமல் வைரலாகும் அண்ணாமலை போஸ்டர்..!