பிரதமர் வரவேற்பில் அண்ணாமலை மிஸ்ஸிங் ஏன்? வரவேற்பு குழுவில் பெயர் இருந்ததா? வெளியானது ஆதாரம்!
கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்கும் குழுவில், பெயர் இருந்தும் அண்ணாமலை வரவில்லை என்ற சர்ச்சையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. வரவேற்புக்குழுவில் அவரது பெயரே இல்லை என்று வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.
கோவை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க அமைக்கப்பட்ட குழுவில் முன்னாள் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரே இல்லை என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது கட்சிக்குள் ஏற்கனவே நிலவும் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடி மார்ச் 29 அன்று கோவை வழியாக கேரளா பிரசாரத்துக்குச் சென்றபோது, விமான நிலையத்தில் அவரை வரவேற்க 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். ஆனால் அண்ணாமலை இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்கள் கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பியபோது, “அண்ணாமலை வீட்டில்தான் இருக்கிறார். அவர் வரவில்லையே” என்று கேட்டனர். அதற்கு வானதி, “நானும் உடனே அண்ணாமலை எப்போது வருகிறார் என்று கேட்டேன். வரவேற்பு பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுதான் அனுப்பினோம். ஆனால் அவர் வரவில்லை என்று தகவல் வந்தது” என்று பதிலளித்திருந்தார்.
இதையும் படிங்க: ஜோசியர் கொடுத்த வார்னிங்! அண்ணாமலை ஜகா வாங்கியதின் பின்னணி!! போட்டியிடாததன் காரணம் இதுதானா?
ஆனால் இப்போது வரவேற்புக் குழுவில் இடம் பெற்றிருந்த 19 பேரின் பெயர்கள் வெளியாகியுள்ளன. அந்தப் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம் பெறவில்லை என்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் பட்டியலில் இருந்தனர். அண்ணாமலை மட்டும் இல்லை.
தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் பா.ஜ.க. 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிப் பங்கீட்டில் அண்ணாமலைக்கு திருப்தி இல்லை என்றும், பேச்சுவார்த்தை நடத்திய மாநில நிர்வாகிகள் மீது அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தச் சூழலில் ஏற்பட்டுள்ள இந்தச் சர்ச்சை கட்சிக்குள் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெயர் விடுபட்டதற்கு யார் காரணம், பட்டியல் தயாரித்தவர்கள் யார், வானதி ஏன் அப்படிப் பதிலளித்தார் என்பது குறித்து பா.ஜ.க. மேலிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. அண்ணாமலை தொடர்பான இந்தச் சம்பவம் தமிழக பா.ஜ.க.வில் தொடர்ந்து நிலவும் உள் மோதலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: ஓரங்கட்டப்படும் நாகர்கோவில் பாஜக எம்.எல்.ஏ காந்தி! தொகுதியை கைப்பற்ற காய் நகர்த்தும் அதிமுக!