கன்னியாகுமரி கடற்கரையில் களமிறங்கிய அண்ணாமலை! 'வீ தி லீடர்ஸ்' மூலம் புதிய முயற்சி! குவிந்தது கூட்டம்!
வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, கன்னியாகுமரி கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக பங்கேற்று செல்பி எடுத்துக் கொண்டனர்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் கன்னியாகுமரி கடற்கரையில் இன்று நடைபெற்ற தூய்மைப் பணி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை நேரடியாக பங்கேற்று கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அவருடன் ஏராளமான அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.
தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு, அண்ணாமலை 'வீ தி லீடர்ஸ்' என்ற அமைப்பை தொடங்கி சமூக விழிப்புணர்வு சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் முழுவதும் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இந்த அமைப்பு நடத்திய நிலையில், ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு தொடர் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இன்று கன்னியாகுமரி கடற்கரைச் சாலை காட்சிக் கோபுரம் பகுதியில் தூய்மைப் பணி நடைபெற்றது. அண்ணாமலை குப்பைகளை அகற்றும் பணியில் நேரடியாக ஈடுபட்டதுடன், கடற்கரையை சுத்தமாக வைத்திருப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்னார்வலர்கள் இணைந்து கடற்கரை பகுதியில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தினர்.
இதையும் படிங்க: 50 ஆயிரம் நீர்நிலைகள் காணாமல் போச்சு..! தண்ணீருக்கே தவிக்கும் நிலை வரும்..! அண்ணாமலை எச்சரிக்கை..!!
இந்த நிகழ்ச்சியின் போது அண்ணாமலையை நேரில் காண ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டனர். பலர் அவருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். இதனால் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதி உற்சாகமான சூழலாக மாறியது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த இந்த மாத நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக உவரி மற்றும் குலசேகரன்பட்டினம் கடற்கரைகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஏரிகள், கால்வாய்கள் சுத்தப்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த பணிகள் இந்த மாதம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் நடைபெற்று வரும் இந்த நடவடிக்கைகளில் பொதுமக்களும் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நதிகள் இணைப்பு திட்டம்... ஊதிய நிதியை விடுவித்த முதல்வர் விஜய்..! நன்றி தெரிவித்த அண்ணாமலை..!!