×
 

ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்! ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தில் யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்!

மொத்தம் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு மத்தியில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்துள்ளார். ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தின் கீழ் இந்த நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த சில மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மாற்று எரிபொருட்களை பயன்படுத்த வேண்டிய நிலையும், சிலிண்டர் விலை உயர்வால் கூடுதல் செலவு ஏற்படும் சூழலும் பொதுமக்களுக்கு உருவாகியுள்ளதாக கூறப்பட்டது.

இந்த சுமையை குறைக்கும் வகையில், முதல் கட்டமாக தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெறும் 4 மணி நேரத்தில் LPG சிலிண்டர் டெலிவரி... இந்தியன் ஆயில் அறிமுகப்படுத்திய புதிய ‘Indane Xtralite Now’ சேவை!

இதில் முக்கியமாக, சிலிண்டரை பயனாளிகள் வழக்கம்போல் பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். சிலிண்டர் பெற்ற பிறகு, எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் பட்டியலின் அடிப்படையில் அதற்கான தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் வருமானம் கொண்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் பயன்பெற உள்ளன. மேலும், சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பங்கள் உள்ளிட்ட சமூகத்தில் நலிவடைந்த குடும்பங்களுக்கும் திட்டத்தில் பயன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், வரும் பொங்கல் காலத்தில் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனால், அடுத்த ஆண்டு முதல் தகுதியான குடும்பங்களின் சமையல் செலவில் கணிசமான நிவாரணம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், பயனாளிகள் தேர்வு செய்யப்படும் முறை, வருமானச் சான்று உள்ளிட்ட தகுதிகள் மற்றும் பதிவு நடைமுறைகள் குறித்து அரசு விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்ட பிறகே முழுமையான தெளிவு கிடைக்கும்.

இதையும் படிங்க: லட்சக்கணக்கானோர் செய்த தவறால் கோடிக்கணக்கானோர் பாதிப்பு! மாற்றம் ஏமாற்றமானது! மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share