“டெல்லியில் போராடி வருவது மாணவர்களே அல்ல.. ரவுடிகள்...” - பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்...!
முழுக்க முழுக்க காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
முதலில், நீட் தேர்வு என்பது 2012ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது கொண்டு வரப்பட்டது. அப்போது அந்தத் துறையின் மத்திய அமைச்சராக குலாம் நபி ஆசாத் இருந்தார். தமிழகத்திலிருந்து கூட்டணிக் கட்சியாக இருந்த திமுகவைச் சேர்ந்த காந்தி செல்வன் அமைச்சராக இருந்தார். மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் (MCI) ஒப்புதலின் அடிப்படையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதை எதிர்த்து பல மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகின. நீட் வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, காங்கிரஸ் அரசின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வாதாடினார். வழக்கு முடிவில், "இனிமேல் யாராலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது" என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.
ஆக, முழுக்க முழுக்க காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. 2012ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தேர்வு, தமிழகத்தில் 2016ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த ஏழை மாணவர்களும் பயன்பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: "தவெககாரன்"...! குற்றவாளிகள் கூடாரமா TVK..? CM விஜய் மீது நயினார் தாக்கு..!
நீட் தேர்வு வருவதற்கு முன்பு என்ன நிலை இருந்தது என்றால், மருத்துவர்களின் குழந்தைகளே பெரும்பாலும் மருத்துவம் படித்தனர். இரண்டு, மூன்று கோடி ரூபாய் வரை செலுத்தி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் நடைமுறை இருந்தது. அந்த நிலையை மாற்றவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால், நீட் தேர்வை நாங்களே கொண்டு வந்து அனைவருக்கும் எதிராகச் செய்தது போல ஒரு மாயை தற்போது உருவாக்கப்படுகிறது.
இப்போது நடைபெறும் போராட்டம் குறித்து பேச வேண்டும். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருக்கும் ஒரு தேர்வை எதிர்த்து தற்போது காங்கிரஸ் கட்சி போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
மே மாதம் 3ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. அதன் சில நாட்களுக்குப் பிறகு வினாத்தாள் கசிந்ததாக தகவல் வந்தது. அந்த முறைகேட்டை ராகுல் காந்தியோ அல்லது வேறு அரசியல் கட்சிகளோ கண்டுபிடிக்கவில்லை. தேசிய தேர்வு முகமை (NTA) தானே அதை கண்டறிந்தது. உடனடியாக அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஜூன் 20ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. சுமார் 20 லட்சம் மாணவர்கள் அதில் பங்கேற்று தேர்வு சீராக நடைபெற்றது.
இந்த விவகாரம் தெரியவந்த உடனே மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாணவர்களிடம் நேரடியாக வருத்தம் தெரிவித்தார். அதேபோல், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவும் மாணவர் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். "மாணவர்களின் எதிர்காலமே எங்களின் முக்கிய நோக்கம்" என்று பிரதமர் கூறியதுடன், இந்த வழக்குகளை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது. விரைவில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகும் போராட்டம் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தின் பின்னால் காங்கிரஸ் கட்சி நிற்கிறது. காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை, யார் ஆதரவு தருவார்கள், எங்கு கூட்டணி அமைக்கலாம், எங்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதற்காக அலைந்து திரிவதுபோல உள்ளது.
இந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் உண்மையான மாணவர்கள் அல்ல. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ரவுடி அங்கு வந்த பிறகுதான் பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. போலீசார் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பத்திரிகையாளர்களே தாக்கப்பட்டனர். பேருந்துகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. பாலஸ்தீனக் கொடிகள் ஏந்தப்பட்டன.
மாணவர் போராட்டத்தில் பாலஸ்தீனக் கொடியை ஏந்த வேண்டிய அவசியம் என்ன? உண்மையில் அவர்கள் யார்? அவர்கள் மாணவர்களா, கலவரக்காரர்களா?
இன்று ராகுல் காந்தி அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறார். தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். இவ்வாறான சூழ்நிலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ளது.
பாராளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் வரும்போதெல்லாம் காங்கிரஸ் கட்சி ஏதாவது ஒரு போராட்டத்தை முன்னெடுக்கிறது. நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டுமென்றால், பாராளுமன்றம் கூடுவதற்கு முன் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏன் பேசவில்லை?
அங்கு பேசாமல், பின்னர் போராட்ட மேடையில் பேசுவது உள்நோக்கம் இருப்பதைக் காட்டுகிறது. இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேச வேண்டிய விஷயத்தை விட்டு, போராட்ட மேடையில் பேசுவது சரியா என்பதே எங்களுடைய கேள்வி.
பிரதமர் தெளிவாக கூறியுள்ளார். மாணவர்களின் எதிர்காலமே அரசின் முன்னுரிமை. யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ராகுல் காந்தியாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அங்கு போராட்டத்தில் இருந்தவர்கள் மாணவர்கள் அல்ல; திட்டமிட்ட செயல்பாடாக அது நடைபெற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதன்பிறகு கேள்வி எழுப்பப்பட்டது: "ராகுல் காந்தி முன்பே அங்கு இருந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அதற்கு திமுக அரசும் கண்டனம் தெரிவித்துள்ளது."
தமிழ்நாடு அரசின் செயல்பாடு மிகவும் வருத்தமளிக்கிறது. "ஜனநாயகன்" என்ற திரைப்படம் வெளியாகியிருக்கிறது. ஜனநாயகம் குறித்து பேசும் படமாக இருந்தாலும், ஜனநாயகமே இல்லாதபடி இன்று அமைச்சர்கள் அனைவரும் திரையரங்குகளில் அமர்ந்திருக்கிறார்கள்.
ஒரு அமைச்சர் தேம்பித் தேம்பி அழுததை பார்த்தேன். ஏதாவது துயரச் சம்பவமோ என்று நினைத்தேன். பின்னர், "இனிமேல் அவர் நடிக்க மாட்டாராம்; அதனால்தான் அழுகிறேன்" என்று கூறியதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர்கள் பர்வேஷ், கல்லாணை உள்ளிட்டோர் படத்தை பார்த்த காட்சிகளை பகிர்ந்துள்ளனர். சட்டப்பேரவை சபாநாயகர், "உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்குப் பிறகு நான் பார்த்த முதல் படம் ஜனநாயகன்" என்று கூறியுள்ளார்.
இன்று வேலை நாள். ஆனால் அமைச்சர்கள் அனைவரும் திரையரங்கில் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: கலவரமாக நினைக்காதீங்க..! மாணவர் நலனில் சமரசம் கிடையாது... நயினார் நாகேந்திரன் உறுதி.!