×
 

இது கேப்பையில் நெய் வடியும் கதை - தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு; முதல்வரை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு 'கேப்பையில் நெய் வடியும் கதை': புதிய தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் சாதாரண பொதுமக்கள் முதல் நாட்டின் முக்கியத் தொழில்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுப் பிரச்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கையில், விவசாயிகளுக்கு 18 மணிநேரம் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தவெக அரசு கூறுவது கேப்பையில் நெய் வடியும் கதையன்றி வேறென்ன?" என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தற்பொழுது மிகக் கடுமையான விமரிசனங்களை முன்வைத்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக டெல்டா பகுதிகளிலும் அண்மைக்காலமாக நிலவி வரும் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் பயிர் பாதிப்புகள் குறித்துத் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையின் விபரமாவது: "தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே ஒட்டுமொத்த மாநிலத்தையும் இருளில் மூழ்கடித்துள்ளனர். இந்த ஆண்டிற்கான குறுவை சாகுபடி பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து இதுவரை தண்ணீர் திறந்துவிடப்படாத காரணத்தால், நடவு செய்த நெற்பயிர்களைக் காப்பாற்ற பெரும்பாலான டெல்டா விவசாயிகள் தங்களது மோட்டார் பம்ப் செட்களையே முழுமையாக நம்பியுள்ளனர். ஆனால், தவெக ஆட்சியில் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால், மும்முனை மின்சாரம் (Three-Phase Power) கிடைக்காமல் மோட்டார்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாகவும், விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலில் இந்த அரசு ஈடுபடக் கூடாது என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், "மின்சார உபகரணங்கள் திருடு போய்விட்டன, ஊரறிய புகார் கொடுத்துள்ளோம் என்றெல்லாம் உப்புசப்பில்லாத காரணங்களைக் கூறித் தனது நிர்வாகத் தோல்வியைத் தவெக அரசு தட்டிக்கழிக்கக் கூடாது. தேர்தல் களத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் தடையில்லா மின்சாரம் எனப் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, தற்பொழுது எளிய மக்களை வதைப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை. எனவே, முதல்வர் விஜய் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தடையற்ற மின்சாரம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும்" என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: தவெக அரசுக்கு எதிராக அதிமுகவின் முதல் கண்டன ஆர்ப்பாட்டம்; எடப்பாடி பழனிசாமி  அறிவிப்பு!

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, தலைநகர் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீண்ட நேர மின்வெட்டு நிலவி வருவதாகப் பொதுமக்கள் தரப்பிலும் புகார்கள் எழுந்து வரும் நிலையில், மாநில அரசின் நிர்வாகத் திறனைக் கேள்விக்குள்ளாக்கி பாஜக தலைவர் விடுத்துள்ள இந்த அதிரடி அறிக்கை அரசியல் வட்டாரங்களில் புதிய விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share