×
 

ஒரு தொகுதியாச்சும் மாத்தி வாங்குங்க!! ஓயாத பிரச்னை!! பியூஸ் கோயலிடம் மல்லுக்கட்டும் பாஜக நிர்வாகிகள்!!!

'புதுக்கோட்டை, கந்தர்வ கோட்டை ஆகிய தொகுதிகளில், ஒன்றை கொடுத்து விட்டு, வேளச்சேரியை பெறுங்கள்' என, தமிழக பா.ஜ., மையக் குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், மத்திய அமைச்சர் பீயூஷ் கோயலிடம் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் சிலவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பாஜக மேலிடத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, புதுக்கோட்டை அல்லது கந்தர்வகோட்டை தொகுதிகளில் ஒன்றை அதிமுகவிடம் விட்டுக்கொடுத்து, சென்னை வேளச்சேரி தொகுதியை பெற வேண்டும் என பாஜக நிர்வாகிகள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் வலியுறுத்தியுள்ளனர்.

நேற்றிரவு சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற தமிழக பாஜக மையக் குழு கூட்டத்தில் இந்த விவகாரம் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய பாஜக நிர்வாகிகள், “அதிமுக ஒதுக்கிய 27 தொகுதிகளில் பலவும் பாஜகவுக்கு சாதகமான தொகுதிகள் அல்ல. வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 6ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே இப்போதும் தொகுதி மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை அல்லது கந்தர்வகோட்டை ஆகியவற்றில் ஒன்றை அதிமுகவிடம் விட்டுவிட்டு, வேளச்சேரியை பெற வேண்டும்” என்று பியூஷ் கோயலிடம் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: பாஜக வேட்பாளர் தேர்வு!! கறார் காட்டும் அமித்ஷா!! கட்சி நிர்வாகிகளுக்கு பறந்த கண்டிஷன்!!

இதற்கு பியூஷ் கோயல், “இது சரிப்பட்டு வருமா?” என்று கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது. அதற்கு பாஜக நிர்வாகிகள், “பாஜக வேட்பாளர்கள் ஏப்ரல் 4ஆம் தேதி மனு தாக்கல் செய்ய உள்ளனர். அதே நாளில் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். எனவே ஏப்ரல் 6ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கலுக்கு அவகாசம் இருக்கிறது. இப்போது கேட்டால் வேளச்சேரி தொகுதி கிடைக்க வாய்ப்பு உள்ளது” என்று பதிலளித்தனர்.

பியூஷ் கோயல், இந்த விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியுடன் இரவே தொலைபேசியில் பேசுவதாக உறுதியளித்தார் என்று கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். மேலும் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கான ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

பாஜகவுக்கு சென்னையில் மயிலாப்பூர் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேளச்சேரி தொகுதியை கூடுதலாகப் பெற முயற்சிப்பது கட்சியின் தேர்தல் உத்தியில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. தொகுதி மாற்றம் குறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக - அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன.

இதையும் படிங்க: மயிலாப்பூரில் யார் போட்டி? தமிழிசையா? கே.டி.ராகவனா? பாஜகவில் நடக்கும் குடுமிப்பிடி சண்டை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share