×
 

வடமாநில தொழிலாளர்களுக்கு வாக்குரிமை... பாஜகவின் சதித்திட்டம்... அம்பலப்படுத்தும் செல்வப் பெருந்தகை...!

தமிழக வாக்காளர் பட்டியலில் வட மாநில தொழிலாளர்களை சேர்க்க பாஜக சதித்திட்டம் தீட்டுவதாக செல்வ பெருந்தகை கண்டனம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக ஒருங்கிணைந்து செயல்படுவதால் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்தார். ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வை தவிர வேறு எந்த கட்சியும் கூட்டணியில் சேர தயாராக இல்லை என்றும் இந்நிலையில் தேர்தல் ஆணையம் தொடங்கியிருக்கிற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கிற வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் தேர்தலில் சிறப்பு தீவிர திருத்தத்தின் காரணமாக 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை பயன்படுத்திக் கொள்ள தமிழக பா.ஜ.க. தீவிரமான உத்திகளை மேற்கொண்டு வருகிறது என்றும் பீகார் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்களிக்கலாம் என்ற தேர்தல் ஆணைய அறிவிப்பை பயன்படுத்தி 41 தொகுதிகளை பா.ஜ.க. குறிவைத்து செயல்படுகிறது. அதன் ஒருபகுதியாகத் தான் சென்னை எழும்பூர், ராயபுரம், துறைமுகம், அம்பத்தூர், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், பூந்தமல்லி ஆகிய 12 தொகுதிகளில் வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் பன்மடங்கு கூடுதலாக அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

அதேபோல, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் அதிகமுள்ள 29 தொகுதிகளை தேர்வு செய்து அதில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாக்காளர்களை நீக்கவும், தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து பா.ஜ.க. முயற்சி செய்து வருவதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.  தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் டீக்கடை முதல் தொழிற்சாலைகள் வரை தற்காலிக முகாம்களை அமைத்து அங்கே தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ் என இந்திய குடிமகன் என நிரூபிக்க எந்த ஆவணமும் இல்லாத நிலையில், நிரந்தர வீடு இல்லாமல் வணிக நிறுவனங்களால் பராமரிக்கப்படுகிறவர்களை பா.ஜ.க.வினர் அணுகி அவர்களை வாக்காளர்களாக ஒட்டுமொத்தமாக சேர்ப்பதற்கு உதவுகிற வகையில் தேர்தல் ஆணையம் புதிய விதியை அறிமுகம் செய்திருக்கிறது என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: 2026லும் திமுகவுடன் தான் கூட்டணி.. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் உறுதி..!

தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் விருப்புரிமையை சீர்குலைக்கின்ற வகையில் வடமாநில தொழிலாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வெற்றி பெற சதித் திட்டத்தை மேற்கொண்டு வரும் பா.ஜ.க.வின் முயற்சிகளை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இருக்கிறது என்று அவர் கூறினார். தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெற்றாலும் இந்த 41 தொகுதிகளில் அதிதீவிர திருத்தம் மேற்கொண்டு பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்பிற்கு அடித்தளம் அமைக்கும் திரைமறைவு முயற்சிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்திருப்பவர்களை வாக்காளர்களாக இணைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த விரைவில் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்க இருப்பதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: அரசியல் நாகரிகம் இல்லாதவர் ராஜேந்திர பாலாஜி... செல்வப் பெருந்தொகை பதிலடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share