கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்! விஜய் டிரைவரிடம் 8 மணி நேரம் விசாரணை! சிபிஐ முன்வைத்த கிடுக்குப்பிடி கேள்விகள்!
கரூர் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் டெல்லியில் சிபிஜ அலுவலகத்தில் நாளைநேரில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ (மத்திய குற்றப்பிரிவு) விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான கண்காணிப்புக் குழு இந்த விசாரணையை மேற்பார்வையிடுகிறது.
சிபிஐ அதிகாரிகள் கடந்த அக்டோபர் 16 முதல் கரூரில் உள்ள சுற்றுலா மாளிகையை தற்காலிக அலுவலகமாகப் பயன்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். இதில் பொதுமக்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உடற்கூறு ஆய்வு செய்த டாக்டர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் அடங்குவர்.
இதையும் படிங்க: விஜய் டிரைவரிடம் விசாரணை!! பிரசார வாகனத்தில் சோதனை!! இறுக்குப்பிடிக்கும் சிபிஐ அதிகாரிகள்!! தப்புமா தவெக!
வரும் ஜனவரி 12-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (ஜனவரி 10) காலை விஜயின் பிரசார வாகன ஓட்டுநர் பரணி சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜரானார்.
அதிகாரிகள் அவரிடம் பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். வாகனம் வேலுச்சாமிபுரத்துக்கு எத்தனை மணிக்கு வந்தது? விஜய் எப்போது பிரசாரத்தைத் தொடங்கினார்? நெரிசல் எப்போது ஏற்பட்டது? பிரசாரம் முடிந்து எப்போது சென்றார்? போன்ற பல கேள்விகளைத் துருவித் துருவிக் கேட்டனர்.
பின்னர், பிரசார வாகனத்தின் உயரம், அகலம் ஆகியவற்றை டேப் மூலம் அளந்தனர். உயர்தர தொழில்நுட்பக் கருவிகளால் வாகனத்தை சோதனை செய்தனர். "அவ்வளவு கூட்டத்துக்கு மத்தியில் இந்தப் பெரிய வாகனம் செல்ல முடியும் என்று நீங்கள் நினைத்தீர்களா? யாராவது சொன்னார்களா?" என்றும் கேட்டனர்.
பின்னர் சிபிஐ குழு வேலுச்சாமிபுரம் சாலைக்குச் சென்று நெரிசல் ஏற்பட்ட இடத்தை அளந்தது. மீண்டும் அலுவலகத்துக்கு வந்து ஓட்டுநர் பரணியிடம் விசாரணையைத் தொடர்ந்தது. கிட்டத்தட்ட 8 மணி நேரம் தீவிர விசாரணைக்குப் பிறகு மாலை 5 மணியளவில் அவரை அனுப்பி வைத்தனர்.
திரும்ப அழைத்தால் பிரசார வாகனத்தை விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்பிறகு ஓட்டுநர் வாகனத்தை சென்னைக்கு ஓட்டிச் சென்றார்.
சிபிஐ வட்டாரங்கள் தெரிவிப்பதன்படி, விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகும்போது, ஓட்டுநர் பரணி அளித்த பதில்களின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பப்படும். விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பான உண்மைகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லியில் இருந்து வந்த ஓலை! சிபிஐ வளையத்தில் விஜய்!! 11ம் தேதியே தலைநகருக்கு பயணம்!