ஈரான் போர் எதிரொலி: அடுத்த வரி குறைப்பில் இறங்கிய மத்திய அரசு..!! இதுக்கு ஜீரோ வரியாம்..!!
மத்திய கிழக்கில் போர் நீடித்து வரும் நிலையில் பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கு முழுமையான வரிவிலக்கு வழங்கும் முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
மத்திய அரசு மத்திய கிழக்குப் பகுதியில் நீடித்து வரும் போர் மோதலால் உலகளாவிய பெட்ரோகெமிக்கல் சப்ளை செயின் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு தொழில்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில் முக்கிய பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கும் முடிவை எடுத்துள்ளது.
இன்று முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவு, ஜூன் 30 வரை நீடிக்கும். இந்த நடவடிக்கை மூலம் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, பல்வேறு உற்பத்தித் துறைகளின் செலவினங்களை குறைக்க அரசு நோக்கம் கொண்டுள்ளது. இந்தியா பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றுக்கு அப்பால், மருந்து உற்பத்தி, பெயிண்ட், டெக்ஸ்டைல், பேக்கேஜிங் மற்றும் பொம்மை தயாரிப்பு உள்ளிட்ட பல தொழில்களுக்கு தேவையான பெட்ரோகெமிக்கல் பொருட்களை உலக நாடுகளிலிருந்து அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தப் பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் downstream தொழில்களான உற்பத்தித் துறைகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அரசின் புதிய அறிவிப்பின்படி, அமோனியம் நைட்ரேட், மெத்தனால், ஸ்டைரின், அசிட்டிக் ஆசிட், பாலிவினைல் குளோரைடு (PVC) உள்ளிட்ட முக்கிய பொருட்களின் இறக்குமதிக்கு அடிப்படை சுங்க வரி முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சுதந்திரக் குரல்வளைக்கு மத்திய அரசு நெருக்குதல்? சமூக ஊடகங்களுக்குப் புதிய ‘சென்சார்’ கத்தி!
மேலும், அமோனியம் நைட்ரேட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி (AIDC) யும் இந்த காலக்கட்டத்தில் நீக்கப்பட்டுள்ளது. இது விவசாயம் மற்றும் தொழில்துறைக்கு பெரும் நிவாரணமாக அமையும்.இதற்கு முன்பாக மார்ச் 27-ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரியை அரசு குறைத்தது. பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.13-இலிருந்து ரூ.3 ஆக குறைக்கப்பட்டது. டீசலுக்கு ரூ.10 வரி முழுவதும் நீக்கப்பட்டு பூஜ்ஜியமாக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வால் உள்நாட்டு எரிபொருள் விலை உயர்வை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.ஈரான் தொடர்பான மோதல் காரணமாக உலகளாவிய பெட்ரோகெமிக்கல் சப்ளை செயின் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன. இது ரிபைனரிகளின் விலை உயர்வை இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை உற்பத்திப் பொருட்களுக்கு மாற்றியுள்ளது.
மருந்து, பெயிண்ட், டெக்ஸ்டைல், பொம்மை உற்பத்தி உள்ளிட்ட துறைகள் கடுமையான செலவு அழுத்தத்தை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, டெக்ஸ்டைல் போன்ற வேலைவாய்ப்பு அதிகம் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு இந்த விலை உயர்வை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு மாற்ற முடியாத சூழல் உள்ளது. இதனால் லாபம் குறைந்து, வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. நிபுணர்கள் கூறுகையில், போர் முடிந்த பின்னரே சப்ளை செயின் முழுமையாக சீராகும் என்றும், அதன் பாதிப்புகளை சரி செய்ய பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கிய பொருட்களில் அன்ஹைட்ரஸ் அம்மோனியா, டொலுயீன், ஸ்டைரீன், மெத்திலீன் குளோரைடு, வினைல் குளோரைடு மோனோமர், மெத்தனால், ஐசோபுரோப்பைல் ஆல்கஹால், மோனோஎத்திலீன் கிளைகால், பினால், அசிட்டிக் அமிலம், PTA, எத்திலீன்டையமீன், அமோனியம் நைட்ரேட், பாலிபுரொப்பிலீன், பாலிஸ்டைரீன், ABS, PVC, PET சிப்ஸ், எபோக்சி ரெசின்கள், பாலிகார்பனேட், பாலியூரித்தேன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கும்.
இந்த தற்காலிக வரி விலக்கு மூலம் உற்பத்தி செலவுகள் குறைந்து, இறுதிப் பொருட்களின் விலை நிலைத்தன்மை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிறு தொழில்களின் நிலைத்தன்மையை உறுதி செய்து, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என அரசு நம்புகிறது.
இதையும் படிங்க: ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகம்..!! மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!