டெண்டர் முறைகேடு! ரூ.1,800 கோடி ஒப்பந்த பாக்கி முடக்கம்!! அதிரடி காட்டிய முதல்வர் விஜய்!
கடந்த தி.மு.க., ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மறு ஆய்வு செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அந்தப் பணிகளை முழுமையாக மறு ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒப்பந்ததாரர்களுக்கு பாக்கியுள்ள 1,800 கோடி ரூபாய் தொகை விடுவிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கடந்த ஆட்சியில் அவசரகதியில் டெண்டர் விடப்பட்ட பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் மறு ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர்கள் தரமான பணியை செய்து முடித்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்யும் வகையில் தீவிர ஆய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்ற பணிகளை செய்த ஒப்பந்ததாரர்களுக்கு பாக்கித் தொகை விடுவிக்கப்படாது. மேலும் அவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு எதிர்காலத்தில் மாநகராட்சி ஒப்பந்தங்கள் எதையும் பெற முடியாத நிலை உருவாகும்.
இதையும் படிங்க: டெண்டர் இல்லாமல் ரூ.1.35கோடிக்கு அட்வான்ஸ்? வாய்மொழி உத்தரவுக்கு வாரி வழங்கிய திமுக! முறைகேடு அம்பலம்?
நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தி.மு.க. ஆட்சியில் பல உட்கட்டமைப்பு திட்டங்கள் மக்களுக்குப் பயன்படும் வகையில் இருந்தாலும், 25 சதவீதம் வரை கமிஷன் கொடுத்து பணம் விடுவிக்கப்பட்டதால் ஒப்பந்ததாரர்கள் தரமான பணியை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளது” என்றனர்.
தற்போது ஒப்பந்ததாரர்கள் 1,800 கோடி ரூபாய் பாக்கியை விடுவிக்கக் கோரி முறையீடு செய்து வருகின்றனர். ஆனால், ஆய்வு முடியும் வரை புதிய பணிகளுக்கு டெண்டர் கோரவும், அவசரமாக ஏற்கெனவே டெண்டர் விடப்பட்ட பணிகளையும் நிறுத்தி வைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆய்வுக்குப் பிறகு திட்ட மதிப்பீடு சரியில்லை எனத் தெரியவந்தால் புதிய மதிப்பீடு தயாரித்து மறு டெண்டர் கோரப்படும்.
இந்த நடவடிக்கை மாநகராட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்ததாரர்கள் மத்தியில் கலக்கம் நிலவும் நிலையில், தரமான பணிகளுக்கு மட்டுமே பணம் விடுவிக்கப்படும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய்யை கேள்வி கேட்டவுடன் சட்டசபை லைவ் நிறுத்தம்! நேரலை தொடரும் என்ற தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?!