×
 

10 வயதில் எடுத்த சபதம்! 20 வயதில் நடந்த கொலை! ரீல்ஸால் வந்த பகை! தவெக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

கண்ணன் வெளியிட்ட ரீல்ஸ்கள் சில இளைஞர்களின் ஆத்திரத்தை அதிகரித்ததாகவும் விசாரணையில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.

சென்னையில் தவெக நிர்வாகி கண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 20 வயது இளைஞர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கான பின்னணியில் பல ஆண்டுகளாக நீடித்த முன்விரோதம் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கண்ணன் வெளியிட்ட ரீல்ஸ்கள் சில இளைஞர்களின் ஆத்திரத்தை அதிகரித்ததாகவும் விசாரணையில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.

சென்னை ராமசாமி அவென்யூ பகுதியில் சனிக்கிழமை இரவு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த கண்ணனை, இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

விசாரணையின் அடிப்படையில் அடையாறு பகுதியைச் சேர்ந்த பரணி, ராகேஷ், திருவான்மியூரைச் சேர்ந்த நரேஷ், கோட்டூரைச் சேர்ந்த மணிகண்டன், இந்திரா நகரைச் சேர்ந்த ஹரிஹரன் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!

கண்ணன் முன்பு அதிமுக வட்டச் செயலராக இருந்ததாகவும், சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்த அவர், அப்பகுதியில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை அழைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் பணிகளில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், கண்ணன் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குகள் அவருக்கு எதிராக இருந்ததாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பரணியின் பெரியப்பா சிவா, கடந்த 2009-ஆம் ஆண்டு கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டதாகவும், பின்னர் பரணியின் தந்தை வேலு 2016-ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் கொலை செய்யப்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுவயதிலேயே கண்ணனை பழிவாங்குவதாக பரணி சபதம் எடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நீண்டகால முன்விரோதத்துடன், தவெகவில் இணைந்த பின்னர் கண்ணன் தொடர்ந்து வெளியிட்ட ரீல்ஸ்களும் பரணியின் ஆத்திரத்தை அதிகரித்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியில் திட்டமிட்ட கொலை நடந்ததா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் vs ஸ்டாலின்! திமுகவை விடப்போவதில்லை! அடுத்த 3 மாதங்களுக்கு தவெகவின் ‘மாஸ்டர் பிளான்’ இதுதானா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share