குன்னத்தில் திமுக - விசிக மோதல்! ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு! கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், திமுகவினரும் கற்களை வீசித் தாக்கி மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர்: தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.,) அமைச்சர் பதவி பெற்றதை அடுத்து, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையம் பகுதியில் வி.சி.க., மற்றும் தி.மு.க., தொண்டர்கள் இடையே கல் வீச்சு மோதல் ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வி.சி.க.,வின் சட்டப்பேரவை உறுப்பினர் வன்னி அரசுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு தி.மு.க., தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. தி.மு.க., துணைப் பொதுச் செயலர் ஆ. ராசா தனது சமூக ஊடகப் பக்கத்தில் வி.சி.க.,வை விமர்சித்து பதிவிட்டிருந்தார். இதற்கு வி.சி.க., தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில், ஆ. ராசாவைக் கண்டித்து வி.சி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. அதே இடத்தில் தி.மு.க., இளைஞரணி சார்பிலும் வி.சி.க., மாவட்டச் செயலர் அன்பானந்தத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது. போலீசார் இரு தரப்புக்கும் அனுமதி மறுத்து தடை விதித்தனர்.
இதையும் படிங்க: திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!
ஆனால் செவ்வாய்க்கிழமை இரு தரப்பினரும் போலீஸ் தடையை மீறி எதிரெதிர் திசையில் கூடினர். தி.மு.க.,வினர் இருசக்கர வாகனங்களில் முழக்கமிட்டபடி வந்தபோது மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். கற்கள் மற்றும் கட்டைகளை வீசியதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடனடியாக தலையிட்டு இரு தரப்பினரையும் கலைந்து அனுப்பினர். மோதலால் குன்னம் கடைவீதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. தற்போது பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த மோதல் தமிழக அரசியலில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வி.சி.க.,வுக்கு அமைச்சர் பதவி வழங்கியது தொடர்பான விவாதங்கள் இன்னும் அடங்காத நிலையில், இந்த சம்பவம் இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவை மேலும் பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: பதவி ஆசையா.? தவெக கூட்டணி எதற்கு..? சர்ச்சைகளுக்கு டாட் வைத்த திருமா..!