இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை.. பெற்று தர தொடர்ந்து போராடுவோம்! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம்..!!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழ் சொந்தங்களுக்கு தேவையான நிரந்தர குடியிருப்புகளை வழங்கி அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை பெற்றுத் தரத் தொடர்ந்து போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, அவர்களுக்கு சட்டப்பூர்வமான இந்தியக் குடியுரிமையைப் பெற்றுத் தரத் தமிழக அரசு சமரசமின்றிப் போராடும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். வெறும் தங்குமிடம் மட்டுமன்றி, அவர்களின் கல்வி மற்றும் பொருளாதாரத் தேவையையும் திராவிட மாடல் அரசு முன்னின்று கவனித்து வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கில், கடந்த 3 கல்வியாண்டுகளில் மட்டும் 5,771 மாணவர்களுக்கு ₹11.07 கோடி கல்வி உதவித்தொகையைத் தமிழக அரசு வழங்கியுள்ளது. முகாம்களில் உள்ள பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்காகச் சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி உதவி மற்றும் இளைஞர்களுக்கு நவீனத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பேணப்பட்டு வருகிறது. தற்காலிகக் குடிசைகளில் வசித்து வந்த தமிழ்ச் சொந்தங்களுக்குத் தரமான மற்றும் பாதுகாப்பான நிரந்தரக் குடியிருப்புகளைத் திராவிட மாடல் அரசு கட்டி வழங்கி வருகிறது.
வீடுகள் கட்டித் தருவதுடன் எமது பணி முடிந்துவிடவில்லை. நீண்டகாலமாக இந்திய மண்ணில் வசித்து வரும் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய இந்தியக் குடியுரிமையைப் பெற்றுத் தரத் தொடர்ந்து போராடுவோம்" என முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். இந்திய அரசு இந்த குடியுரிமை விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்கும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதுவரை தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தமிழக அரசின் குரல் ஓயாது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்... புதிய தொழில் முதலீடுகளுக்கு பச்சைகொடி!
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் ஈழத் தமிழர்கள் விடுபட்டிருப்பதைச் சுட்டிக்காட்டித் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் முதலமைச்சர், தற்போது அவர்களின் வாழ்வாதாரப் புள்ளிவிவரங்களுடன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இதுதான் சமூக நீதியா ஸ்டாலின் அவர்களே? தூத்துக்குடி மாணவன் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!