×
 

பக்தராக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் இதை செய்யாதீர்... ஸ்டாலினுக்கு தமிழக பாஜக வலியுறுத்தல்!!

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு சிக்கல் ஏற்படுத்தக்கூடாது என தமிழக முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளது.

மதுரையில் வரும் 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு மூலம் தமிழ்நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயல்வதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், மாநாட்டுக்கு சிக்கல் ஏற்படுத்தக்கூடாது என தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத், தமிழக முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் ஸ்டாலின், தான் முருக பக்தர் இல்லை என்று, ஈ.வெ.ராமசாமியின் கூட்டத்தினருக்கு காட்டுவதில் பெருமை கொள்ளலாம். அதேசமயம், அவர் 'தமிழ் கடவுள் முருகனுக்கு எதிரி' என்ற நினைப்பை மக்களிடம் உருவாக்கும் வகையில், மதுரை முருக பக்தர் மாநாட்டுக்கு திமுக அரசு பல தடைகளை மறைமுகமாக விதிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சாசன சட்டப்படி அனைத்து மதத்திற்கும் பொதுவான முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட வேண்டும். ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள், அலறி துடிப்பதில் இருந்து, முருக பக்தர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெறப்போவது உறுதியாகியுள்ளது.

முதல்வர் ஸ்டாலினின் 'இந்து விரோத பெரியார் திமுக', துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 'இந்து விரோத மிஷினரி திமுக', தொடர்ந்து முருக பக்தர் மாநாடு குறித்து அவதூறு பிரச்சாரம் செய்து வரும் அறமற்ற அமைச்சர் சேகர்பாபுவின் 'அந்நிய மதவாத இந்து ஆதரவு நாடக திமுக' என தேர்தல் அரசியலை குறி வைத்து, பழநியில் கோயில் உண்டியல் காசை கொள்ளை அடித்து திமுக அரசு நடத்திய மாநாட்டின், தீய நோக்கத்தை மக்கள் அறிந்து கொண்டனர். இந்து மதத்தைச் சிதைக்கும் வண்ணம், தமிழக மக்களைப் பிரிக்கும் வகையில், திமுக அரசு செய்யும் சதியைப் புரிந்து கொண்டனர். அதன் விளைவாக தமிழகம் இந்தியா மட்டுமின்றி உலகத்தில் உள்ள முருக பக்தர்கள் அனைவரின் தன்னெழுச்சியுடன் மதுரையில் 22 ஆம் தேதி முருகன் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், முருக பக்தர்கள் மாநாட்டை திட்டமிட்டு தடுக்கும் விதமாக, திமுக அரசின் தூண்டுதலின் பேரில் முருக பக்தர் மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் அதிகாரம், மே 17 இயக்கம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் ஆகிய அமைப்புகள் சார்பில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்து இந்து விரோத நாடகத்தை அரங்கேற்றி உள்ளது.

இதையும் படிங்க: இத செஞ்சா ஆட்சியை பிடிக்கலாம்! முதல்வர் சொன்ன #TOP SECRET..!

சமூக நல்லிணக்கத்தை குறைக்கும் வகையில் கீழ்த்தரமாக முருக பக்தர்கள் மாநாடு குறித்தும், இந்து மதம் குறித்தும், இந்து கடவுள்கள் குறித்தும் இகழ்ந்து அவர்கள் பேசி வருவதை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. மேலும் தமிழகம் முழுக்க கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு, முருக பக்தர்கள் மாநாட்டு அழைப்பிதழ்களை விழா குழுவினர் விநியோகிக்க, காவல்துறையினர் தடை செய்கின்றனர். முருக பக்தர்கள் மிரட்டப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றனர். நாயன்மார்களும், ஆழ்வார்களும் வாழ்ந்து வழிகாட்டிய தமிழகம், எப்போதுமே ஆன்மிக பூமி. அன்னிய மத படையெடுப்பாளர்களால் வட மாநிலங்களில், இந்து கோயில்கள் இடிக்கப்பட்ட போதிலும் தமிழகத்தில் பல நூறு ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகளை கடந்த கோவில்கள் ஏராளம் உள்ளன. தமிழகத்தின் ஆன்மாவான ஆன்மிகத்தை சிதைக்க பல முயற்சிகள் நடந்தாலும் அவற்றை எல்லாம் முறியடித்து ஆன்மிக மண் என்பதை நிரூபித்தே வந்துள்ளது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மிகமிக முக்கியமானது முருக பக்தி. தமிழக மக்களின் உணர்வுகளோடு கலந்து விட்ட கடவுள் முருகன். தமிழகத்தில் பல்லாயிரம் முருகன் கோயில்கள் இருந்தாலும், அறுபடை வீடுகள் மிக முக்கியமானவை.

தமிழக மக்களின் பெரும்பாலானோர், அறுபடை வீடுகளுக்கும் சென்று, முருகப் பெருமானை தரிசிப்பதை தங்கள் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்கள். அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் மலை மீது அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள மலையில் அன்னிய மத ஆக்கிரமிப்பாளர்களால் 'சிக்கந்தர் தர்கா' ஒன்று இடையில் கட்டப்பட்டுள்ளது. இதை காரணம் காட்டி, தமிழ்க் கடவுள் முருகனுக்கு சொந்தமான கந்தர் மலையை, சிக்கந்தர் மலையாக மாற்ற சில சக்திகள் முயற்சித்தன. சில மத அடிப்படைவாத அமைப்பினர், முருகன் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு விருந்து வைக்கப் போவதாக அறிவித்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ் கனி தலைமையில் சென்றவர்கள், திருப்பரங்குன்றம் முருகன் மலைப் பாதையில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டு அதன் படங்களையும் வெளியிட்டனர். இதைக் கண்ட ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்தது. அதன் விளைவாக கடந்த பிப்ரவரி 4ம் தேதி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதற்கு திமுக அரசு தடைவிதித்தபோதும், நீதிமன்றம் அனுமதி அளித்த சில மணி நேரங்களிலேயே 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டது திமுக உள்ளிட்ட இந்து விரோத அரசியல் கட்சிகளை மிரளச் செய்தது. திட்டமிடாத ஆர்ப்பாட்டத்திற்கே மிரண்டவர்கள், திட்டமிட்டு நடக்கும் மாநாட்டை கண்டு அலறிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் ஆன்மிக பூமி என்பதை நிரூபிக்கவும், மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்திற்கு மட்டும் எதிராக நடக்கும் திமுக அரசு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தவுமே இந்த மாநாடு நடக்கிறது. தமிழ்நாட்டில் இந்துக்களையும், இந்து மதத்தையும் தொடர்ந்து இழிவு படுத்தி இந்த ஒரு தமிழக முதல்வர் ஸ்டாலினின் கொடுங்கோல் அரசியலுக்கு முடிவு கட்ட நேரம் குறிக்கப்பட்டு விட்டது. பிரிவினைவாதம், வகுப்புவாதம் மதவாதம் பேசி, சாதியால் மதத்தால், மொழியால், இனத்தால் வேறுபடுத்தி இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்த தீய சக்திகளுக்கு, தொடர் சதிகளுக்கு, தேர்தல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்து மதத்தின் எழுச்சி திருவிழாவாக, முருக பக்தர்கள் மாநாடு தடைகளை உடைத்து நடைபெறும். அரசியல் சார்பற்று முருக பக்தர்களை ஒன்று திரட்டும் இந்த மாநாடு பெரும் வெற்றி பெறும். அது இந்து விரோத சக்திகளுக்கு சாட்டையடி கொடுப்பதாக இருக்கும். திருப்பரங்குன்றத்தில் முருக பக்தர்களின் எழுச்சி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலித்தே தீரும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிளேட்டை திருப்பிப் போடுகிறார் அமித் ஷா... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share