×
 

தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது... எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின்!!

தொகுதி மறுவரையறை குறித்து தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசு ஈடுபடப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி பாஜகவுக்கு சாதகம் இல்லாத தென் மாநிலங்களில் ஏற்கனவே உள்ள தொகுதிகளை குறைத்தும், பாஜகவுக்கு சாதகமாக உள்ள வட மாநிலங்களில் தொகுதியை அதிகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன. இதுக்குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி, ஆலோசனைக் கூட்டமும் நடத்தினார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை வந்தபோது, இது பொய்யான தகவல், தொகுதி மறுசீரமைப்பால் தென்னிந்தியாவில் ஒரு தொகுதி கூட குறையாது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல.

நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது. ஒன்றிய பா.ஜ.க அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன. அதேவேளையில், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டைப் பல பத்தாண்டுகளாகக் காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ நாடாளுமன்றத்தில் கூடுதல் இடங்களைப் பெற இருக்கின்றன. அநீதியான இந்த நடவடிக்கை கூட்டாட்சியின் சமநிலையைக் குலைத்து, பொறுப்பற்ற தன்மைக்கு வெகுமதி அளிக்கிறது. இந்தச் சதித் திட்டம் குறித்து நான் முன்பே எச்சரித்திருந்தேன். தற்போது, ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரமும், பா.ஜ.க எப்படி இந்தக் கைவரிசையைக் காட்டப் போகிறது என்பதை விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். நாம் விழிப்போடு இருப்பது மட்டுமல்ல, தென்னகத்தின் குரலைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வியூகங்களையும் தீட்டவேண்டிய வேண்டிய தருணம் இது.

இதையும் படிங்க: தமிழகத்தில் தொடரும் தாசில்தார்கள் மாற்றம்... தூத்துக்குடியில் ஒரே நாளில் 17 பேர் டிரான்ஸ்பர்!!

1971-ஆம் ஆண்டு சென்சஸ் தரவுகள் போய், 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தரவுகள்தான், அதற்கடுத்து உடனே நிகழும் தொகுதி மறுவரையறைக்கு, அடிப்படையாக அமையும். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, தனக்குச் சாதகமான முறையில் நாடாளுமன்ற இடங்களை பா.ஜ.க நிர்ணயித்துக் கொள்ளத்தான் இது வழி ஏற்படுத்தும். தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் சொல்கிறது. ஆனால் இவை தெளிவற்ற மழுப்பல் பதில்கள். இவர்கள் சொல்வதைத் தண்ணீரில்தான் எழுதிவைக்க வேண்டும். நாம் கேட்பதெல்லாம் நாடாளுமன்றத்தில் உறுதி அளியுங்கள், உரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுங்கள் என்பதே. பிரிவு 370-ஐ நீக்கிய பிறகு என்ன நடந்தது என்று பார்த்தாலே இவர்களது பேச்சின் லட்சணம் புரிந்துவிடும்.

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என ஒன்றிய அரசு சொன்னது.  தேர்தலும் நடைபெற்றது. உச்சநீதிமன்றத்திலேயே உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், ஜம்மு காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட சத்தியவான்களோடுதான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். 2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை ஒன்றிய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும். அ.தி.மு.க போன்ற அடிமைத் துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பா.ஜ.க முன் மண்டியிட்டாலும், தி.மு.கவின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும். நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். #தமிழ்நாடு_போராடும்! #தமிழ்நாடு_வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கோரிக்கை வைத்துள்ள விசைப்படகு மீனவர்கள்... முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை சென்ற மனு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share