×
 

தமிழ்தாய் வாழ்த்தா? வந்தே மாதரமா?... முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே விஜய்க்கு காத்திருக்கு பெரும் சிக்கல்...!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: தமிழ் தாய் வாழ்த்தா? வந்தே மாதரமா? என்ற எதிர்பார்ப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், கூட்டத்தொடர் தொடக்கத்தில் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுமா அல்லது வந்தே மாதரம் பாடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆளுநர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் இடம்பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு ஏற்கனவே விளக்கியிருந்தது.

தற்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக உள்ள அருளேக்கர், கேரள மாநில ஆளுநராகவும் பதவி வகிக்கிறார். கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது வந்தே மாதரம் பாடல் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், தமிழகத்தில் ஆளுநர் தரப்பிலிருந்து வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதையும் படிங்க: "2 நாட்கள் அனைவருக்கும் இலவசம்"... முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் அதிரடி அறிவிப்பு...!

வழக்கமாக தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கும்போது, முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படுவதும், கூட்டத்தொடர் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் மரபாக இருந்து வருகிறது. ஆனால், அண்மைக் காலமாக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாக்களில் வந்தே மாதரம் பாடப்பட்டதைத் தொடர்ந்து, திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும், தமிழக வெற்றிக் கழக கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்தச் சூழ்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலில் தமிழ் தாய் வாழ்த்து மட்டுமே பாடப்படுமா அல்லது அதனுடன் வந்தே மாதரமும் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வந்தே மாதரம் பாடப்பட்டால் சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்றும், மறுபுறம் அது பாடப்படாவிட்டால் ஆளுநர் உரையை வாசிப்பாரா அல்லது புறக்கணிப்பாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. முன்னாள் ஆளுநர் ஆர்.என். ரவி, தேசிய கீதம் தொடர்பான நடைமுறைகளை சுட்டிக்காட்டி சில நிகழ்வுகளை புறக்கணித்துச் சென்ற சம்பவங்களும் நினைவுகூரப்படுகின்றன.

எனவே, தற்போதைய ஆளுநர் அருளேக்கர், சட்டப்பேரவையில் தமிழக அரசு பின்பற்றி வரும் மரபுகளையே ஏற்றுக்கொள்வாரா அல்லது வேறு நிலைப்பாட்டை எடுத்துக்கொள்வாரா என்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், ஆளுநர் உரையில் இடம்பெறவுள்ள அறிவிப்புகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அடுத்த ஓராண்டிற்கான அரசின் செயல்திட்டங்கள், கொள்கை நோக்கங்கள் மற்றும் முன்னுரிமைகள் குறித்து இந்த உரை திசைகாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம்பெறுமா என்பதிலும் பல தரப்பினரின் கவனம் திரும்பியுள்ளது.

இதனால், ஆளுநர் உரை மட்டுமின்றி, கூட்டத்தொடர் தொடக்கத்தில் எந்தப் பாடல் இடம்பெறுகிறது என்பதும் இன்று தமிழக அரசியலில் முக்கிய கவனப் பொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் விஜயுடன் வைகோ சந்திப்பு..! அரசியலில் எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share